ஒடிசாவுக்கு அடித்த ஜாக்பாட்.. ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் அதானி குழுமம்.. கரண் அதானி அறிவிப்பு
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் புவுனேஸ்வர், கட்டாக் நகரில் டேட்டா, எரிசக்தி துறை உள்பட பல்வேறு துறைகளில் ரூ.33,081 கோடிக்கும் அதிகமாக முதலீடுகளை அதானி குழுமத்தை சேர்ந்த கரண் அதானி அறிவித்துள்ளார்.

நம் நாட்டின் முன்னணி தொழில் குழுமமாக அதானி குழுமம் உள்ளது. ஒவ்வொரு மாநிலங்களிலும் பல்வேறு துறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒடிசாவில் தொழில் மற்றுமு் டிஜிட்டல் துறையில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் டேட்டா சார் உள்கட்டமைப்பு, எரிசக்தி மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளில் மாநிலத்தின் நீண்டகால வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை கரண் அதானி வெளியிட்டார்.
ரூ.800 கோடி மதிப்பீட்டில், புவனேஸ்வரின் இன்போ வேலி பகுதியில் அதிநவீன தரவு மையம் அமைக்கப்படவுள்ளது. செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற தொழில்நுட்பங்களுக்கு ஆதரவளித்து, மாநிலத்தின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை இது வலுப்படுத்தும். இத்திட்டம் சுமார் 200 உயர் திறன் கொண்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் எரிசக்தித் துறையில் கட்டாக் நகர் அருகே ரூ.30,181 கோடி முதலீட்டில் புதிய அனல் மின் உற்பத்தி நிலையம் அமையவுள்ளது. இந்தத் திட்டம், தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகளுக்கான மின் விநியோகத்தை நம்பகத்தன்மையுடன் மேம்படுத்தி, ஏறக்குறைய 7,000 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
கட்டாக் அருகே ரூ.2,100 கோடி முதலீட்டில் சிமென்ட் உற்பத்தி ஆலை ஒன்றும் நிறுவப்படுகிறது. இத்திட்டம் சுமார் 2,500 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது என்று அதானி குழுமம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கரண் அதானி கூறுகையில், ''இந்தியாவின் தொழில்துறை மற்றும் டிஜிட்டல் துறைக்கான எதிர்காலத்தில் ஒடிசாவின் முக்கிய பங்காற்ற வேண்டும். வலுவான நிர்வாகம், இயற்கை வளங்கள், அமைவிடம் உள்ளிட்டற்றால் ஒடிசா முக்கிய பொருளாதா மையமாக மாறி வருகிறது.
இந்த திட்டங்கள் ஒடிசாவின் பொருளாதார பாதையில் அதானி குழுமத்தின் நீண்டகால நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். 2036-க்குள் 500 பில்லியன் டாலர் பொருளாதாரமாகவும், 2047-க்குள் 1.5 டிரில்லியன் பொருளாதாரமாகவும் ஒடிசா மாறும். ஒடிசாவின் லட்சியப் பார்வையுடன் இம்முதலீடுகள் உள்ளன.
ஒடிசா வர்த்தகம், கலாச்சாரம், நாகரிகத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போது இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய உந்து சக்தியாக அமைய ஒடிசா தயாராகி வருகிறது. முதலீடுகளை எளிதாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனால் இத்திட்டங்கள் வெறும் உள்கட்டமைப்பு முதலீடுகள் மட்டுமல்ல; அவை மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், செழிப்புக்கும் அளிக்கப்படும் நம்பிக்கையின் வாக்குறுதியாகும்'' என்றார். இந்த நிகழ்வில் ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி மற்றும் மாநிலத் தலைவர்கள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications