விஜய் மீது ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமாருக்கு பொறாமை.. ஏனென்றால்..! நடிகர் பாரதி கண்ணன் சொன்ன காரணம்
சென்னை: தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் இன்று முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய தவெக, கூட்டணி ஆதரவுடன் பெரும்பான்மையை எட்டியதைத் தொடர்ந்து ஆட்சியமைக்கும் நிலை உருவாகியுள்ளது.

நடிகர் பாரதி கண்ணன் பேட்டி
இந்த சூழ்நிலையில், நடிகர் பாரதி கண்ணன் விஜய் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறிய கருத்துகள் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் மீது பொறாமை அதிகம்
பாரதி கண்ணன் தனது பேட்டியில், "விஜய் சார் மீது தமிழ் சினிமாவில் பலருக்கும் பொறாமை இருக்கிறது. குறிப்பாக முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலருக்கும் இந்த உணர்வு இருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, "ரஜினி சார் பலமுறை அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்தார், ஆனால் அது நடக்கவில்லை. அதே சமயம், அவரைத் தொடர்ந்து வந்த நடிகர் விஜய் சினிமாவிலும் சாதித்து, அரசியலிலும் வெற்றி பெற்றிருப்பது அவருக்கு இயல்பாகவே ஒரு வருத்தத்தை கொடுத்திருக்கலாம்" என கூறினார்.
கமல்ஹாசன், சரத்குமார் குறித்து கருத்து
மேலும்,"கமல்ஹாசனால் ஒரு இடம் கூட வெல்ல முடியாத சூழலில், அதே துறையில் இருந்து வந்த விஜய் இத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவது அவருக்கும் ஒரு அதிர்ச்சி தான். சரத்குமார் ஆரம்பத்தில் விஜய்க்கு ஆதரவாக இருந்தாலும், அரசியல் வந்தபிறகு விமர்சனங்கள் அதிகமானது பொறாமையால்தான்" என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், "சத்யராஜ்க்கு சத்தியமா பொறாமை இருக்கு. அதனால்தான் பல இடங்களில் விஜய் குறித்து கடுமையாக பேசியிருக்கிறார். இது எல்லாமே அரசியல் போட்டியோடு சேர்ந்து வரும் மனநிலைகள்" எனவும் அவர் கூறினார்.
அழிக்க முயன்றாலும் முடியவில்லை
பாரதி கண்ணன் தனது பேட்டியில் மேலும், "விஜய்யை அரசியலில் இருந்து தள்ள வேண்டும், அவரைப் பற்றி அவதூறு பரப்ப வேண்டும் என்று பலரும் முயற்சி செய்தார்கள். ஆனாலும் மக்கள் அவர்மீது வைத்த நம்பிக்கையால்தான் இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.
அதேசமயம்,"இத்தனை வெற்றியைப் பெற்ற பிறகும் அவர் ஆட்சி அமைப்பதில் சிக்கல்கள் எதிர்கொண்டது வேதனையாக இருக்கிறது. ஆனாலும் அவர் அதை தாண்டி நல்ல ஆட்சி கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது" எனவும் கூறியுள்ளார்.
அரசியல் சூழ்நிலை
தவெக தனியாக பெரும்பான்மை பெறாததால் கூட்டணி ஆதரவு அவசியமான சூழ்நிலை ஏற்பட்டது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்ததன் மூலம் விஜய் தேவையான எம்.எல்.ஏ எண்ணிக்கையை கடந்தார். இதன் பின்னரே ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.
ஒரு நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த விஜய், முதல் தேர்தலிலேயே பெரிய வெற்றி பெற்றிருப்பது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அவரைச் சுற்றியுள்ள ஆதரவும், விமர்சனங்களும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கின்றன.
பாரதி கண்ணன் பேசிய இந்த கருத்துகள், விஜயின் அரசியல் பயணம் எவ்வளவு கவனத்தை ஈர்த்திருக்கிறது என பார்க்கப்படுகிறது. இனி, முதலமைச்சராக விஜய் எப்படி செயல்படப் போகிறார் என்பது தான் அனைவரின் கவனமும் எதிர்பார்ப்பும் ஆகும்.












Click it and Unblock the Notifications