மனைவிக்கு ஆசையாக செல்போன் கிப்ட் கொடுத்த கணவர்.. ஆன் செய்தவுடன் வீட்டையே சுற்றி வளைத்த போலீஸ்
கொல்கத்தா: கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் திருமண நாளுக்காகத் தனது மனைவிக்கு ஸ்மார்ட்போன் ஒன்றைப் பரிசாக வாங்கி கொடுத்துள்ளார். இருப்பினும், அந்த ஸ்மார்ட்போனை ஆன் செய்த அடுத்த நொடி வீடு தேடி குஜராத் போலீஸ் வந்துவிட்டது. இதனால் அவர்கள் ஒரு நொடி அதிர்ந்து போய்விட்டார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மேற்கு வங்க மாநிலத்தில் வழக்கறிஞர் ஒருவர் தனது மனைவிக்காகப் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கியுள்ளார். அந்தப் பெண்ணும் கணவர் கொடுத்த பரிசு என்பதால் சந்தோஷமாக செல்போனை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். ஆனால், சில வாரங்களிலேயே வீடு தேடி போலீஸ் வந்துவிட்டதாம். அதாவது அந்த ஸ்மார்ட்போன் ஒரு பெரிய சைபர் கிரைம் வழக்கில் சம்பந்தப்பட்டு இருந்துள்ளது.

ஷாக் சம்பவம்
இதனால் அந்த ஐஎம்இ நம்பரை வைத்து போலீசார் டிராக் செய்து வந்துள்ளனர். இத்தனை காலம் செல்போன் ஸ்விட்ச் ஆப்பில் இருந்துள்ளது. இதனால் செல்போன் எங்கே என்பது தெரியாமல் இருந்தது. ஆனால், அந்த மனைவி செல்போனை ஆன் செய்தவுடனேயே குஜராத் போலீசார் டிராக் செய்து வந்துள்ளனர். இதை எல்லாம் கேட்டு அந்த தம்பதி அதிர்ச்சியின் உச்சத்திற்கே போய்விட்டனர். சைபர் க்ரைமில் பயன்படுத்தப்பட்ட சாதனங்களைப் புதியது போல் மாற்றி விற்பனை செய்யும் ஒரு பெரிய மோசடியாக இது இருக்கலாம் என்ற கோணத்தில் இப்போது போலீஸ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இந்த ஆண்டு தொடக்கத்தில் சால்ட் லேக் பகுதியில் நடந்தது. அந்த வழக்கறிஞர் கொல்கத்தாவின் மிஷன் ரோ எக்ஸ்டென்ஷனில் உள்ள ஒரு கடையில் ரூ.49,000 மதிப்புள்ள ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போனை வாங்கினார். அந்த போன் நன்றாகச் சீல் செய்யப்பட்டு இருந்தது. கூடவே ஜிஎஸ்டி ரசீதையும் கூட கொடுத்துள்ளனர். பார்ப்பதற்கு அது அப்படியே புதிது போல இருந்துள்ளது. இதனால் அந்த வழக்கறிஞருக்குப் பெரிதாகச் சந்தேகம் வரவில்லை.
திருமண நாள் கிப்ட்
இது தனது திருமண நாளுக்குச் சரியான பரிசாக இருக்கும் என நினைத்த அவர், பிப்ரவரி மாதம் தனது திருமண நாளின்போது மனைவிக்குப் பரிசாக அளித்தார். அந்தப் பெண்ணும் கணவன் அளித்த செல்போனை வழக்கம் போல யூஸ் செய்ய ஆரம்பித்துள்ளார். ஆனால், சில நாட்களிலேயே குஜராத்தில் உள்ள ராஜ்கோட் போலீசார் அந்தத் தம்பதியரின் வீட்டிற்கு வந்துவிட்டனர். அவரது மனைவி பயன்படுத்தும் போன் ஒரு சைபர் கிரைம் விசாரணையில் தொடர்புடையது எனக் கூறியுள்ளனர்.
வீட்டிற்கே வந்த போலீஸ்
அந்த போனின் IMEI நம்பரை வைத்து போலீசார் கண்டுபிடித்ததில், அது ஆன்லைன் மோசடியில் பயன்படுத்தப்பட்ட செல்போன் என்பது தெரிய வந்தது. இந்தக் குற்றச்சாட்டைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தத் தம்பதியினர், அவர்கள் அந்த போனை சட்டப்பூர்வமாகத்தான் வாங்கினோம் என்றும் குற்றச் செயலுக்கும் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்றும் கூறினர். இந்த விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த வழக்கறிஞர் உடனடியாக கொல்கத்தாவில் உள்ள ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு பின்னர் போவ்பஜார் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அந்த செல்போனை விற்ற கடைக்காரர் மற்றும் அதை சப்ளை செய்த விநியோகஸ்தர் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கடையின் மீது எந்தவொரு தவறும் இருப்பது போலத் தெரியவில்லை. இதையடுத்து இப்போது விநியோகஸ்தர் மீது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிர விசாரணை
அந்த மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டு, அது யாருக்கு சொந்தமானது.. இதற்கு முன்பு அதை யாராவது பயன்படுத்தியுள்ளனரா என்பதைக் கண்டுபிடிக்கத் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இதுபோல ஏற்கனவே நடந்துள்ளதா.. சைபர் க்ரைம் போன்களை புதியது போல் விற்பனை செய்யும் ஒரு பெரிய மோசடியின் ஒரு பகுதியா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது ஒரு பெரிய மோசடியின் தொடக்கமாக இருக்கலாம் என்றும் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார். மேலும், இதற்குப் பின்னால் ஒரு பெரிய கும்பல் இருந்தால், இந்த கொல்கத்தா வழக்கறிஞரைப் போலவே பலரும் சிக்கலில் மாட்டலாம்.












Click it and Unblock the Notifications