எதை அரசியலாக்கனும் என்ற விவஸ்தை இல்லையா.. ஜன கண மன VS வந்தே மாதரம்.. மேற்கு வங்கம் உஷ்ணம்
கொல்கத்தா: நாட்டின் தேசிய பாடல் "வந்தே மாதரம்" (பாடல் ஆசிரியர்: பங்கிம் சந்திர சட்டோபாத்தியாய்) மற்றும் தேசிய கீதம் "ஜன கண மன" (பாடல் ஆசிரியர்: ரவீந்திரநாத் தாகூர்) ஆகியவற்றை மையமாக வைத்து, மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சி செய்யும் திரிணாமூல் காங்கிரஸ் (TMC) மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான பாஜக இடையே புதிய அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது. 2026 மார்ச்-ஏப்ரலில் நடக்க உள்ள மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, இந்த மோதல் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
பாஜக, "வந்தே மாதரம்" பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாட ஒரு ஆண்டு நிகழ்வுகளைத் தொடங்கியுள்ளது. அதற்கு பதிலளிக்கும் வகையில், TMC அரசு, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மேற்கு வங்கத்தின் மாநிலப் பாடலான "பங்களார் மாட்டி, பங்களார் ஜோல்" (தாகூர் எழுதியது) பாடப்படும் என அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சர் பிரத்ய பாசு கூறியதாவது: "பாஜக வகுப்புவாத அரசியல் செய்கிறது - இந்து-முஸ்லிம், பிராமணர்-தலித் என பிரிக்க முயற்சிக்கிறது. இப்போது இரண்டு பெரிய வங்காள எழுத்தாளர்களான தாகூர் மற்றும் பங்கிம் சந்திரருக்கு இடையே பிளவு ஏற்படுத்த முயல்கிறது. தாகூர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையைப் பேசினார். அதனால் தான் பாஜகவுக்கு அவர் பிடிக்கவில்லை!" என்றார்.
பாஜக எம்பி, மத்திய அமைச்சர் சுகாந்த மஜும்தார்: "மமதா பானர்ஜி அரசியல் நெருக்கடியில் சிக்கும் போதெல்லாம், வங்காள பெருமிதத்தை (அஸ்மிதா) எடுத்து வருகிறார். இது எல்லாம் நாடகம் தான்!" என்றார்.
இதனிடையே மம்தா கட்சி, கொல்கத்தாவில் உள்ள ஜோராசாங்கோ தாகூர் பாரி (தாகூரின் பூர்வீக வீடு) அருகே பேரணி நடத்தி, அவருக்கு அஞ்சலி செலுத்தியது. அதைத் தொடர்ந்து "தாகூரை மதிக்க வேண்டும்" என்று கோரி போராட்டமும் நடத்தியது.இது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
2026 தேர்தலுக்கு முன்னதாக, TMC-பாஜக இடையே வந்தே மாதரம் vs ஜன கண மன என்ற புதிய கலாச்சார-அரசியல் மோதல் தொடங்கியுள்ளது. இது வங்காள மக்களின் உணர்வுகளையும், பெருமிதத்தையும் மையமாகக் கொண்ட ஒரு போட்டியாக மாறியுள்ளது. அரசியலுக்காக, தேசிய கீதமும், தேசிய பாடலும் வங்கத்தில் பயன்படுத்தப்படுவது வேதனைதான்.












Click it and Unblock the Notifications