அன்று கையில் வெறும் 12 ரூபாய்! இன்று ஊழியர்களுக்கு கார், பைக்கை அள்ளி கொடுக்கும் சவ்ஜி! யார் இவர்?
காந்தி நகர்: ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின்போது தனது ஊழியர்களுக்கு கார், வீடு என்று பரிசுகளை அள்ளி கொடுக்கும் சூரத் தொழிலதிபர் குறித்து நாம் கேள்விப்பட்டு இருப்போம். அவர் தனது தொடக்கக் காலத்தில் வெறும் 12 ரூபாயுடன் சூரத் வந்தவர் என்றால் நம்ப முடிகிறதா.. யார் அவர்.. எதற்காகத் தனது ஊழியர்களுக்குப் பரிசுகளை அள்ளி கொடுத்து வருகிறார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
கடந்த சில ஆண்டுகளாகவே தனது ஊழியர்களுக்கு கார்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளைப் பரிசாகக் கொடுக்கும் சூரத் தொழிலதிபர் பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். பொதுவாகப் பண்டிகைக் காலங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸை மட்டுமே கொடுக்கும். ஆனால், இவரது கிப்ட்களை பார்த்தால் ஊரே வியந்துவிடும். இதுபோல ஒருவரிடம் நாம் வேலை செய்யவில்லையே என்றும் தோன்றும்.!

யார் இவர்
மேலும், ஊழியர்களுக்கு அள்ளி கொடுக்கும் இவர் யார்.. இவரது பின்னணி தான் என்ன என்றும் கூட பலரும் யோசிப்பார்கள். அவர்தான் சவ்ஜி தோலகியா. இவர் இந்தியாவின் முன்னணி வைர ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்டர்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார். இவரை "இந்தியாவின் வைர ராஜா" என்றும் கூட அழைக்கிறார்கள்.
வைர ஏற்றுமதி தொழிலில் இவர் தொடர்ச்சியாகப் புதிய உயரங்களை எட்டி லாபத்தை அள்ளி வருகிறார். அதேநேரம் சம்பாதிப்பதை இவர் தனக்கு மட்டும் வைத்துக் கொள்வதில்லை. தனது செல்வத்தை ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவும் இவர் தனித்துவமான பெயரைப் பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி கொண்டாட்டங்களின் போது, தோலகியா தனது நீண்டகால ஊழியர்களுக்கு கார்கள், வீடுகள் மற்றும் மதிப்புமிக்க பிற பரிசுகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறார்.
மதிப்புடன் நடத்த வேண்டும்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஊழியர்கள் மதிப்புடன் நடத்த வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக உணரும்போது தான் அவர்கள் வேலையிலும் சிறப்பாகச் செயல்படுவார்கள்" என்றார்.. நிறுவனத்தைக் கட்டியெழுப்பி இந்தளவுக்கு வளர்த்தவர்களுடன் தனது லாபத்தைப் பகிர்ந்து கொள்வதில் எதுவும் ஆகிவிடாது என்றும் சொல்லப்போனால் அதுதான் சரியான ஒன்று என்று இவர் நம்புகிறார்.
12 ரூபாயுடன் சூரத் வந்தவர்
இந்தளவுக்குத் தனது ஊழியர்களைப் பாதுகாக்கும் சவ்ஜியின் தொழில் வாழ்க்கை அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. தோலகியா குஜராத்தில் உள்ள சௌராஷ்டிராவின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள துதலா கிராமத்தில் பிறந்தார். அவர் தனது 12 வயதில் சூரத் வந்தார். அப்போது அவரது பாக்கெட்டில் வெறும் ரூ.12 மட்டுமே இருந்தது.. முதலில் வைர வியாபார ஒருவரிடம் பணிக்குச் சேர்ந்து தொழிலை கற்றுக் கொண்டார். பின்னர் தனது மாமாவின் நிதி உதவியுடன் சொந்தமாகத் தொழிலைத் தொடங்கினார்.
சீரான வளர்ச்சி
பல ஆண்டுகளாக வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் சவ்ஜி படிப்படியாகவே வளர்ந்தார். ஒரேயடியாக ஓவர்நைட்டில் கோடீஸ்வரன் ஆனவர் இல்லை சவ்ஜி.! மாறாக ஒவ்வொரு ஆண்டும் தனது நிறுவனத்தை மெல்ல விரிவுபடுத்தினார். இதன் மூலம் அவர் தனது நிறுவனத்தை ஆண்டுக்கு ரூ.15,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் ஒரு நிறுவனமாக வளர்த்தெடுத்தார்.
தனது பிஸ்னஸை தாண்டி சவ்ஜி பல சமூக சேவைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். வறட்சி பாதித்த கிராமங்களில் நீர் பாதுகாப்புத் திட்டங்களைச் செய்து வருகிறார். இப்படி பலதரப்பட்ட மக்களுக்குத் தனது செல்வத்தைப் பகிர்ந்து தருவதாலேயே இவரிடமும் செல்வம் சேர்கிறது என்கிறார்கள் நெட்டிசன்கள்!












Click it and Unblock the Notifications