கடைசி சான்ஸ்.. டிரம்ப்-க்கு ஒரே கண்டிஷன் வைத்த ஈரான்.. மொத்த போரும் முடிவுக்கு வருகிறது!
அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றம் தொடரும் நிலையில், ஈரான் ஒரு முக்கிய அமைதி ஒப்பந்தத்தை அளித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையின் மீதான தனது கட்டுப்பாட்டை தளர்த்த தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு அமெரிக்கா தனது கடற்படை முடக்கத்தை நீக்கி, போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது ஈரானின் நிபந்தனையாக வைத்துள்ளது. இது ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வரும் கடைசி சான்ஸாக பார்க்கப்படுகிறது.
ஈரான் முன்வைத்துள்ள இந்த புதிய திட்டத்தில் அணு ஆயுதங்கள் மற்றும் யுரேனியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை பிற்காலத்திற்கு ஒத்திவைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஹார்முஸ் நீரிணையை உடனடியாக திறப்பது மற்றும் போரை நிறுத்துவது ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது. இந்த முன்மொழிவு பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணையின் முக்கியத்துவம்
ஹார்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையாகும். உலகின் மொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த நீரிணை வழியாகவே செல்கிறது. இந்தப் பாதையில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனையும் உலகளாவிய எண்ணெய் விலையை உயர்த்தி, பல நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கும். ஆனால் ஈரான் போரால் கிட்டத்தட்ட 60 நாட்களாக முடங்கியுள்ளது. ஈரான் இந்த நீரிணையை தனது பலமாகப் பயன்படுத்தி வருகிறது.
அமெரிக்காவின் நிலைப்பாடு
அமெரிக்க வெள்ளை மாளிகை இந்த முன்மொழிவை பெற்று ஆய்வு செய்து வருவதாக ஒப்புக்கொண்டுள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்புக் குழு இதை பரிசீலித்து வருகிறது. இருப்பினும், அணு விவகாரங்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஈரானின் நிபந்தனைகளை ஏற்பது அமெரிக்காவுக்கு கடினமானதாக உள்ளது. டிரம்ப் இதுதொடர்பாக விரைவில் கருத்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இரு நாடுகளும் நேரடி போரில் ஈடுபடவில்லை. ஆனால் முழுமையான அமைதியும் இல்லை. இந்த "போர் இல்லை, அமைதியும் இல்லை" இந்த நிலை நீண்டகாலம் நீடித்தால், சிறிய சம்பவங்கள் கூட பெரிய மோதலாக மாறும் அபாயம் உள்ளது. ஈரான் பொருளாதார அழுத்தத்தில் இருக்கும் நிலையில், அமெரிக்காவும் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வால் அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்கிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இந்த பேச்சுவார்த்தை முயற்சிகள் வெற்றி பெறுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும். 2 மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக ஒரு எல்என்ஜி கப்பல் ஹார்முஸ்-ஐ தாண்டியுள்ளது.
அமெரிக்காவின் பலம் குறைந்தது
இதேவேளையில் ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா அமைதியாக இருக்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டு உள்ளது. கடந்த 5 வருடமாக அமெரிக்கா, உக்ரைன் போர், வெனிசுலா தாக்குதல், ஈரான் போர் என தொடர்ந்து தனது ஆயுத இருப்பை வேகமாக பயன்படுத்தி வருகிறது. இதனால் மொத்த இருப்பில் 50 சதவீதம் குறைந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் ஈரான் போர் நீட்டித்தால் கையிருப்பில் இருக்கும் ஆயுதம், ஏவுகணை இருப்பும் குறையும். இதனால் போர் நிறுத்தம் அவசியமாகியுள்ளது.
மறுமுனையில் சீனாவின் ரேர் எர்த் மெட்டல் ஆயுத உற்பத்திக்கு முக்கியம் என்பதால் சீனாவை எந்த வகையிலும் பகைத்துக்கொள்ள முடியாத நிலையும் தற்போது உருவாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தான் சீனா தைவான் நாட்டை கைப்பற்றும் முயற்சிகளையும், முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதை அமெரிக்கா அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறது.












Click it and Unblock the Notifications