சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடக்கும்? நடைமுறைகள் என்னென்ன! விஜய்க்கு அக்னி பரிட்சை
சென்னை: தமிழக சட்டசபையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. ஆளுநர் அர்லேகர் பெரும்பான்மையை காட்ட உத்தரவிட்ட நிலையில் இன்று அவையில் இதற்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடைபெறும்? அதற்கான விதிமுறைகள் என்னென்ன? என்பது தொடர்பான விரிவான விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வென்றது. 108 இடங்களில் வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 10 ஆம் தேதி அன்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். 120 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியதால் அழைப்பு விடுத்த அளுநர் சட்டசபையில் மே 13 ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் உத்தரவிட்டு இருந்தார். இதன்படி, தமிழக சட்டமன்ற தேர்தலில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடைபெறும் என்று பார்க்கலாம்:
பெரும்பான்மையை நிரூபிக்கும் நடைமுறைகள்
* சட்டமன்ற கூட்டத்தொடரை புதிதாக தேர்வு செய்யபட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நடத்துவார்.
* அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படும். இந்த தீர்மானத்தை ஆளும் கட்சியில் இருந்து ஒருவர் முன்மொழிவார். இறுதியாக முதல்வர் விஜய் பேசி தனது அரசின் நம்பிக்கையை கோருவார்.
* சபாநாயகர் ஆளுங்கட்சிக்கு ஆதரவு கோர வாய்ப்பளித்த பிறகு, வாக்கெடுப்பிற்காக அவையின் அனைத்து கதவுகளும் மூடப்படும்.
* உறுப்பினர்கள் கணக்கீடு: வாக்கெடுப்பின் போது அவையில் இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுவர்; இதற்காக அவை ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும்.
50% அதிகமானோர் ஆதரவு அளித்தால் மட்டுமே
* வாக்கெடுப்பில் பங்கேற்ற மொத்த உறுப்பினர்களில் 50 % அதிகமானோர் ஆதரவு அளித்தால் மட்டுமே பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதாக கருதப்படும். அதாவது 230 பேர் கலந்து கொள்கிறார்கள் என்று எடுத்துக்கொண்டால் 116 பேர் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.
* சபாநாயகர் அறிவிப்பு: வாக்கெடுப்பு முடிந்ததும், எண்ணிக் கணிக்கும் முறையில் பெறப்பட்ட இறுதி முடிவை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.
* தற்போதுள்ள நிலையில் விஜய்க்கு 120 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. ஒரு உறுப்பினர் வாக்களிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை கணக்கிட்டாலும் விஜய்க்கு தனிப்பெரும்பான்மை உள்ளதாகவே தெரிகிறது. கடைசி நேர அதிரடி திருப்பங்கள் எதுவும் நிகழாவிட்டால் விஜய் தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை காட்டுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பரபரப்புக்கு பஞ்சமின்றி
* அதிமுகவில் சிவி சண்முகம் தலைமையிலான குழு எம்.எல்.ஏக்கள் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளனர். எடப்பாடி தரப்பு தவெகவிற்கு எதிராக வாக்களிப்பதாக கூறியுள்ளது. இதனால், நாளை அவை நடவடிக்கைகள் பரபரப்புக்கு பஞ்சமின்றி நடைபெறும்
* அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவியேற்றுள்ள நிலையில், முறைப்படி நேற்று இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இருக்கையின் மேலே அவரவர் பெயர்கள் ஓட்டப்பட்டது.
விஜய்க்கு எவ்வளவு எம்எல்ஏக்கள் ஆதரவு:
தமிழக சட்டசபை எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 232 ஆக குறைந்துள்ளது. விஜய்க்கு 106 எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட ஆதரவு அளிக்கும் கட்சிகள் 13 என 119 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. ஆனால் தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு தேவையான எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 117 ஆகும். இதனால் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பில் எந்தவித சிக்கலையும் எதிர்கொள்ள போவதில்லை என கூறப்படுகிறது.
சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் விஜய் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாழ்த்து கோஷங்களை எழுப்பி வரவேற்றனர். இந்த கூட்டத்தில் சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்தும், சட்டசபை நிகழ்வுகள் குறித்தும் எம்.எல்.ஏ.க்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் எடுத்து கூறியதாக தெரிகிறது.















Click it and Unblock the Notifications