இனி தங்கம் வாங்க முடியாது.. இரவோடு இரவாக இறக்குமதி வரி 6% இருந்து 15% உயர்த்திய மத்திய அரசு..ஷாக்
டெல்லி: பொதுமக்கள் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கி இருந்தார். இந்நிலையில் தான் மக்கள் தங்கம் வாங்குவதை தவிர்க்கும் வகையில் இரவோடு இரவாக தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றின் மீதான அடிப்படை சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் காரணமாக நம் நாட்டுக்கான கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 60 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய், கேஸ் மட்டுமே உள்ளன. அதுமட்டுமின்றி சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி உள்ளது. வரும் நாட்களிலும் விலை உயர வாய்ப்புள்ளது. இதனால் வெளிநாடுகளின் கச்சா எண்ணெயை நம்பி இருக்கும் நம் நாடு எதிர்காலத்தில் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ளலாம். அதாவது கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை வாங்க அதிக அந்நிய செலாவணியை செலவிட நேரிடலாம்.
ஒரு நாட்டுக்கு அந்நிய செலாவணி என்பது மிகவும் முக்கியம். வர்த்தகம், முதலீடு உள்ளிட்டவற்றில் உள்நாட்டு கரன்சியை வெளிநாட்டு கரன்சிக்கு ஏற்ப மாற்றி கொடுக்கும் செயல்முறைக்கு அந்நிய செலவாணி அடிப்படையில் தான் நடக்கும். அந்நிய செலவாணி இருந்தால் மட்டுமே நாம் பிற நாடுகளிடம் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய முடியும். இதனால் தான் தற்போது அந்நிய செலவாணி கையிருப்பை காக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்று மோடி கூறியுள்ளார்.
அதன்படி ஹைதராபாத்தில் பேசிய மோடி ''பெட்ரோல் மற்றும் டீசலை சேமிப்பதன் மூலமாக அதற்கான அந்நிய செலாவணி செலவை குறைக்கலாம். இதனால் பெட்ரோல், டீசல் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் பொதுபோக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற வாய்ப்பு வழங்க வேண்டும். ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை நிறுத்த வேண்டும்'' என்றார். வெளிநாடுகளில் இருந்து அதிகப்படியான தங்கத்தை நம் நாடு இறக்குமதி செய்யும் நிலையில் அதற்காக அந்நிய செலவாணி செலவாகிறது. இதனால் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று மோடி கூறினார்.
மேலும் பொதுமக்கள் தங்கம் வாங்குவதை தடுக்கும் வகையில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை இரவோடு இரவாக அதிரடியாக உயர்த்தி உள்ளது. அதன்படி தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பில், 10 சதவீத அடிப்படை சுங்க வரியும், கூடுதலாக 5 சதவீத வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரியும் (AIDC) சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் வெளிநாடுகளில் இருந்து தங்கம் வாங்கும்போது கூடுதல் செலவாகும். இது அப்படியே நம் நாட்டில் எதிரொலிக்கும். இதனால் இன்று முதல் மீண்டும் நம் நாட்டில் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவை பொறுத்தவரை அதிகளவில் தங்கம் வாங்கும் நாடுகளில் 2வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே தங்கம் விலை உச்சத்தில் உள்ள நிலையில் தற்போதை வரி உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் தங்கம் வாங்குவதை குறைப்பார்கள் என்று மத்திய அரசு கணக்குப்போடுகிறது. இந்நிலையில் தான் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தங்கம் பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது












Click it and Unblock the Notifications