நடுக்கடலில் இந்திய கப்பல்களை சிறைபிடித்த ஈரான்? ஹார்முஸில் வெடித்த புதிய பதற்றம்
தெஹ்ரான்: அமெரிக்கா ஈரான் இடையேயான மோதல் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. இன்றைய தினம் ஹார்முஸில் சில கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் ஒன்று இந்தியாவுக்குச் சொந்தமானது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையேயான மோதல் இப்போது தற்காலிகமாக மட்டுமே முடிவுக்கு வந்துள்ளது. இந்த மோதல் இதுவரை முழுமையாக முடிவுக்கு வரவில்லை. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அங்குப் போர் மேகங்கள் தொடர்ந்து இருக்கிறது. போர் நிறுத்தம் இன்று புதன்கிழமையுடன் முடிய இருந்த சூழலில், திடீரென ஈரான் மீதான போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக டிரம்ப் இரவோடு இரவாக அறிவித்தார்.

டிரம்ப்
இருப்பினும், ஈரானைச் சுற்றி வளைத்து நிற்கும் கப்பல்கள் பின்வாங்காது எனத் திட்டவட்டமாக அறிவித்தார். அதாவது ஈரான் மீது நேரடியாகத் தாக்குதல்களை நடத்துவதற்குப் பதிலாக அவர்களைப் பொருளாதார ரீதியாக முடக்க வேண்டும் என்பதே டிரம்பின் திட்டமாகும்.
திடீர் தாக்குதல்
இந்த அறிவிப்பு வந்த சில மணி நேரங்களிலேயே, ஹார்முஸ் ஜலசந்தியில் வந்து கொண்டு இருந்த கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹார்முஸில் யார் கண்ட்ரோலில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையிலேயே இந்த தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. மொத்தம் 3 கப்பல்களை ஈரான் குறிவைத்துத் தாக்கியதாகவும் அதில் இரண்டை சிறை பிடித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையே தாக்கப்பட்ட கப்பல்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
அதாவது ஈரான் புரட்சிகர காவல் படை தாக்கி, சிறைபிடித்த கப்பல்களில் ஒன்று இந்தியாவைச் சேர்ந்தது எனச் சொல்லப்படுகிறது... இது இந்தியா - ஈரான் இடையிலான உறவில் புதிய சிக்கல்களை உருவாக்கியுள்ளது.
இந்திய கப்பல்
பனாமா மற்றும் லைபீரியா நாடுகளைச் சேர்ந்த இரண்டு கன்டெய்னர் கப்பல்கள் ஈரான் தடுத்து நிறுத்தப்பட்டு, ஈரான் கடற்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் இதில் ஒரு கப்பல் குஜராத் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறைபிடிக்கப்பட்ட கப்பல்கள்: MSC Francesca (பனாமா) மற்றும் Epaminodes (லைபீரியா)
இது தவிர கிரேக்க நிறுவனத்திற்குச் சொந்தமான 'Euphoria' என்ற கப்பலும் துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளாகி, தற்போது கடலில் தத்தளித்து வருகிறது.
ஈரான் பதிலடி
சமீபத்தில் அமெரிக்கக் கடற்படை, ஈரான் நாட்டை சேர்ந்த இரண்டு கப்பல்களைக் கைப்பற்றியிருந்தது. இதற்குப் பதிலடியாகவே ஈரான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக ஈரான், "எங்கள் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை விலக்கினால் மட்டுமே அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியம்" எனச் சொல்லியுள்ளது. இதில் ஈரான் பிடிவாதம் காட்டி வரும் நிலையில், இந்தச் சம்பவம் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
குஜராத் நோக்கி வந்த கப்பல்கள் சிறை பிடிக்கப்பட்டிருப்பது இந்திய வர்த்தக வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போதையச் சம்பவம் இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
தொடரும் பதற்றம்
உலகப் பொருளாதாரத்தின் முக்கிய நரம்பாக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் நடக்கும் இந்த மோதல், வெறும் இரு நாடுகளுக்கு இடையிலானது மட்டுமல்ல.. அது இந்தியாவைப் போன்ற இறக்குமதி நாடுகளின் முதுகெலும்பையே பாதிக்கும். இந்த மோதல் முழுமையாக முடிவுக்கு வராத வரை.. நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல்களின் கதி கேள்விக்குறிதான்.. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் மத்திய கிழக்கில் அமைதி திரும்பாவிட்டால், அதன் அலைகள் இந்தியத் துறைமுகங்களிலும் பலமாக வீசும்!












Click it and Unblock the Notifications