டிரம்ப் அதிரடி: ஈரான் போர் முடிவுக்கு வருகிறது.. பாகிஸ்தானில் 2வது மீட்டிங் விரைவில்
ஈரான் துறைமுகங்களை மொத்தமாக முடக்கிய அமெரிக்க கடற்படையால் ஹார்முஸ் வழித்தடத்தில் அதிகப்படியான கப்பல்கள் செல்ல துவங்கியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா நாடுகளின் துறைமுகங்கள் மீண்டும் பிசியாகியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த முக்கியமான பேட்டியில், ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று தெரிவித்தார். அதே நேரத்தில், அடுத்த சில நாட்களில் பாகிஸ்தானில் ஈரான் தலைவர்களுடன் இரண்டாவது முறையாக நேருக்கு நேர் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது நாளாக ஆக்ஷன் மோடு
அமெரிக்க ராணுவம் மற்றும் கடற்படை ஹார்முஸ் நீரிணையில் ஈரானுக்கு செல்லும் மற்றும் ஈரானில் இருந்து வெளியே வரும் கப்பல்களின் வர்த்தகத்தை முழுமையாக நிறுத்தியுள்ளது என்று அறிவித்துள்ளது. இந்தத் தடை இரண்டாவது நாளாக தொடர்கிறது. இதன் மூலம் ஈரானின் கடல் வழி வர்த்தகம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படை அதிகாரிகள், ஈரான் தொடர்புடைய கப்பல்களை ரேடியோ மூலம் தொடர்புகொண்டு திரும்பச் செல்ல உத்தரவிட்டு வருகின்றனர். இதுவரையில் எவ்விதமான தாக்குதல்கள் நடக்கவில்லை எனவும் குறிப்பிட்டு உள்ளனர்.
8 கப்பல்கள் கோ பேக்
திங்கள்கிழமை முதல் அமெரிக்க கடற்படை, ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் டேங்கர்கள் உட்பட 8 கப்பல்களை திருப்பி அனுப்பியுள்ளது. இந்தக் கப்பல்கள் ஈரானின் துறைமுகங்களில் இருந்து வெளியேறும் போதும், உள்ளே நுழையும் போதும் அமெரிக்கக் கடற்படை வீரர்கள் தலையிட்டு நிறுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு முறையும் ரேடியோ மூலம் தொடர்புகொண்டு திரும்பச் செல்ல உத்தரவிடப்பட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. எந்தக் கப்பலையும் தாக்கவோ அல்லது அமெரிக்க ராணுவ வீரர்கள் கைப்பற்றவோ அவசியம் ஏற்படவில்லை. அனைத்து கப்பல்களும் உத்தரவுக்கு இணங்கி திரும்பிச் சென்றுள்ளன.
ஈரான் மொத்தமாக முடங்கியது
அமெரிக்காவின் சென்ட்ரல் கமெண்ட் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஈரானின் துறைமுகங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கக் கடற்படை முழு ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், ஈரானின் பொருளாதாரத்தில் சுமார் 90 சதவீதம் கடல் வழி வர்த்தகத்தைச் சார்ந்துள்ளது. தடை அமலுக்கு வந்து 36 மணி நேரத்துக்குள் ஈரானுக்கு செல்லும் மற்றும் வெளியே வரும் கடல் வர்த்தகத்தை அமெரிக்கப் படைகள் முழுமையாக நிறுத்தியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் ஈரானின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், டிரம்பின் போர் விரைவில் முடிவுக்கு வரும் அறிவிப்பும், பாகிஸ்தானில் இரண்டாவது சந்திப்பு நடைபெறும் தகவலும், பதற்றம் நிறைந்த இந்தப் பகுதியில் அமைதி திரும்பும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications