6வது வீரர் காயம்.. அஸ்வின் கேட்ட கேள்வி சரிதான்.. சிஎஸ்கே மெடிக்கல் டீம் என்னதான் செய்றாங்க!
சென்னை: ஆயுஷ் மாத்ரே காயம் அடைந்த போது சிஎஸ்கெ அணியின் மெடிக்கல் டீம் மீது ஜாம்பவான் வீரர் அஸ்வின் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். தற்போது ஒரேயொரு போட்டியில் ஆடிய ராமகிருஷ்ணா கோஷ் காயத்தால் வெளியேறி இருப்பது, அஸ்வினின் கேள்விக்கு நியாயம் சேர்த்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன் சிஎஸ்கே அணியின் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அவர் ஹாம்ஸ்ட்ரிங் பிரச்சனையில் சிக்கிய போதும் கூட, சிஎஸ்கே அணி நிர்வாகம் அவரை தொடர்ச்சியாக விளையாட வைத்தது. இதுதொடர்பாக அஸ்வின் பேசுகையில், ஆயுஷ் மாத்ரே ஹாம்ஸ்ட்ரிங் பிரச்சனையுடன் விளையாட அனுமதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு நிமிடம் வர்ணனையில் இருந்த அனைவருமே மைக்கை கீழே வைத்துவிட்டு மிரண்டுவிட்டோம். ஏனெறால் ஹாம்ஸ்ட்ரிங் பிரச்சனையின் போது கூடுதலாக ரிஸ்க் எடுத்தால், அது இன்னும் பெரிய சிக்கலை உருவாக்கும். ஆயுஷ் மாத்ரேவை எப்படி சிஎஸ்கே அணியின் மெடிக்கல் டீம் அனுமதித்தது என்று தெரியவில்லை. நீண்ட நாட்களாகவே சிஎச்கே அணி இந்த தவறை செய்து வருகிறது.
சிஎஸ்கே அணியில் உள்ள மெடிக்கல் டீமிற்கு வீரர்களின் காயத்தை சரியாக அணுகுவதில்லை. 3 சீசன்களாக சிஎஸ்கே அணிக்காக ஆடிய தீபக் சஹர் 16 போட்டிகளில் மட்டுமே ஆடி இருந்தார். ஆனால் மும்பை அணிக்கு சென்ற பின், தீபக் சஹர் ஒரே சீசனில் 14 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஒரு வீரரைத் தயார்படுத்துவதிலும், காயத்தைத் தடுப்பதிலும் சிஎஸ்கே நிர்வாகம் கோட்டை விடுகிறது என்று தெரிவித்தார்.
அஸ்வினின் இந்த கேள்வி அப்போது கொஞ்சம் அதிக எமோஷனில் பேசியதாக பார்க்கப்பட்டது. ஆனால் அஸ்வினின் குற்றச்சாட்டு உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே தோனி இன்னும் முழுமையாக குணமடையவில்லை. நேதன் எல்லீஸை கண்காணித்து அவரை தயார் செய்ய சிஎஸ்கே அணி தவறிவிட்டது.
அதேபோல் ஆயுஷ் மாத்ரே, கலீல் அஹ்மத் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறிவிட்டனர். டிவால்ட் பிரெவிஸ் முதல் 3 போட்டிகளில் காயத்தால் விளையாடவில்லை. ஸ்பென்சர் ஜான்சன் இன்னும் காயத்தில் இருந்து குணமடைந்து களமிறங்கவில்லை. இப்படியான சூழலில் ராமகிருஷ்ணா கோஷ் ஒரே போட்டியில் காயத்தில் சிக்கி வெளியேறி இருக்கிறார்.
இதனால் சிஎஸ்கே அணியின் மெடிக்கல் டீம் என்ன செய்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரே சீசனில் 6க்கும் அதிகமான வீரர்கள் காயத்தால் வெளியேறுவது மிகப்பெரிய பின்னடைவாக உருவாகி இருக்கிறது. இதனால் கேப்டன் ருதுராஜ் மற்றும் பயிற்சியாளர் ஃபிளமிங் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications