அடுத்தது உள்ளாட்சித் தேர்தல்.. இனி காங்கிரஸ் கட்சியின் காலம்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன கருத்து!
சென்னை: உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். 59 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாட்டில் அமைச்சர்களாக வரலாற்றை படைத்துள்ளதாக கூறிய கிரிஷ் சோடங்கர், இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை மறுகட்டமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.
59 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் கட்சி தமிழக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் இருவரும் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ளனர். இவர்கள் இருவருக்கும் சுற்றுலா துறை மற்றும் உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் கிரிஷ் சோடங்கர் பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கு இது உணர்ச்சி மிகுந்த தருணம். அதேபோல் வரலாற்று தருணம். 59 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லையென்றாலும், காங்கிரஸ் கட்சியினர் மக்கள் சேவையில் இருந்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்கு தொண்டர்கள் உண்மையாக இருந்திருக்கின்றனர். ஆனாலும் ஒருமுறை கூட அதிகாரத்தில் பங்கெடுக்க முடியவில்லை. இதற்காக தமிழக மக்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம். இரு அமைச்சர்களிடமும் ஏற்கனவே பேசி இருக்கிறேன். காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கையை கேட்க மாதத்திற்கு ஒருமுறை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.
அவர்களை சந்திக்க காங்கிரஸ் தொண்டர்களும் உற்சாகமாக வருவார்கள். முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம் குறித்து இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. ஒருவேளை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க விஜய் விரும்பினால், அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறுவதன் மூலமாகவே அடிமட்ட அளவில் காங்கிரஸ் கட்சியால் வலிமை பெற முடியும். காங்கிரஸ் கட்சியை மறுகட்டமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
இனி வரும் காலம் காங்கிரஸ் கட்சியின் காலம். தமிழக காங்கிரஸில் மாற்றம் செய்வது தொடர்பாக இதுவரை ஆலோசிக்கவில்லை. நாங்கள் மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டுள்ளோம். மக்களின் முடிவுக்கு ஏற்ப தவெக ஆட்சியை ஆதரித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications