ஃபேஸ்புக் கருத்துகளால் இலங்கையில் வன்முறை.. மதக்கலவரத்தை தடுக்க சமூக வலைதளங்கள் முடக்கம்
சிலா: இலங்கையில் மதக்கலவரம் பரவாமல் தடுப்பதற்காக சமூக வலைதளங்கள் மீண்டும் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் சிலா நகரைச் சேர்ந்த இருபிரிவினரிடையே, ஃபேஸ்புக்கில் உருவான வாக்குவாதம் பெரும் மோதலாக உருவெடுத்துள்ளது. இதனால் ஒரு பிரிவினர் அப்பகுதியில் உள்ள மசூதிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில். 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் குண்டுவெடிப்பை தொடர்ந்து அந்நாட்டில் இரு பிரிவினரிடையே தொடர்ந்து மனக்கசப்பு நிலவி வருகிறது.
இதனை வெளிப்படுத்தும் வகையில் இரு பிரிவை சேர்ந்த சிலர் முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப்பில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். சமூக வலைதளங்களில் ஏற்பட்ட வாக்குவாதம் நேரில் மோதிக்கொள்ளும் அளவிற்கு சென்றது.
இதனையடுத்து ஒருபிரிவினரின் வழிபாட்டு தலங்கள் மற்றும் சில கடைகள் மீதும் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இரு பிரிவினரும் மோதிக்கொள்ளும் சூழல் உருவானதால், சிலா நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் காவல்துறையினரும் பாதுகாப்பு படையினரும் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது நிலவரம் சீரடைந்தாலும் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பெரும் வன்முறை வெடிக்க வாய்ப்பு இருப்பதாக உள்ளூர்வாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்நாட்டில் சமூக வலை தளங்களான முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப் செயலிகளை முடக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் மோதலை தவிர்த்து அமைதியாக இருக்க இருபிரிவை சேர்ந்த மத தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஈஸ்டர் தின தாக்குதல்களுக்கு காரணமான உண்மை குற்றவாளிகளையும், கலவரக்காரர்களையும் கண்டறியாமல் இலங்கை அரசு தோல்வியடைந்து விட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications