கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் மூலவர் சிலையில் இருந்து 23 சவரன் நகை திருட்டு! பூசாரி கண்ணீர்
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் மூலவர் சிலையில் இருந்த 23 சவரன் தங்க நகைகளை திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
உளுந்தூர்பேட்டை தாலுக்கா கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் கடந்த 14ஆம் தேதி சித்திரை திருவிழா சாகை வார்த்தலுடன் தொடங்கியது.

வரும் 28ஆம் தேதி இரவு சுவாமி கண்திறப்பு நிகழ்ச்சியும் திருநங்கைகள், பக்தர்கள் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர். 29ஆம் தேதி காலை 6.30 மணியளவில் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.
விழாவையொட்டி நேற்று காலை 7 மணிக்கு கோயில் பூசாரி கூத்தையன் (60), அவரது மகன் சரத்குமார் (30) ஆகியோர் சுவாமிக்கு பூஜை செய்து முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர். பின்னர் கோயில், பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டிருந்தது.
காலை 8.30 மணிக்கு கூத்தையன், கோயிலுக்கு வந்து பார்த்த போது மூலவர் சிலையில் இருந்த 23 சவரன் நகைகள் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருநாவலூர் போலீஸார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாமி கும்பிடுவது போல் வந்த யாரோ இந்த திருட்டு செயலை செய்துள்ளனர் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, களம் பலி கொடுக்க தகுதியான ஒருவரைத் தேடினர். அதற்கு அர்ஜுனனின் மகன் அரவான் முன்வந்தார். ஆனால், அவர் பலியாவதற்கு முன் தனக்குத் திருமணம் நடக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையை விதித்தார்.
பலியாகப் போகும் ஒருவரைத் திருமணம் செய்ய எந்தப் பெண்ணும் முன்வராத நிலையில், ஸ்ரீ கிருஷ்ணர் 'மோகினி' அவதாரம் எடுத்து அரவானைத் திருமணம் செய்து கொண்டார். அடுத்த நாள் அரவான் களம் பலி கொடுக்கப்பட்டதும், மோகினி விதவைக் கோலம் பூண்டார். இந்த நிகழ்வே கூவாகம் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள்
தாலி கட்டுதல்: சித்திரை திருவிழாவின் 17-ஆம் நாள் அன்று, பல்லாயிரக்கணக்கான திருநங்கையர் கூவாகத்தில் திரண்டு, பூசாரியின் கையால் தாலி கட்டிக் கொள்வார்கள். அன்று இரவு முழுவதும் அவர்கள் மணப்பெண் கோலத்தில் கொண்டாட்டங்களில் ஈடுபடுவர்.
அரவான் கடப்பலி (தேரோட்டம்): மறுநாள் காலை, அரவான் உருவம் தாங்கிய பிரம்மாண்ட தேர் வீதி உலா வரும். இது அரவான் போர்க்களத்திற்குச் செல்வதைக் குறிக்கிறது.
தாலி அறுத்தல் (விதவைக் கோலம்): அரவான் பலியானதைக் குறிக்கும் வகையில், பூசாரி அரவானின் சிலைக்குப் பலி கொடுத்ததும், தாலி கட்டிக் கொண்ட திருநங்கையர் தங்கள் தாலியை அறுத்து, வளையல்களை உடைத்து, பூக்களைக் களைந்து விதவைக்கோலம் பூணுவார்கள். இந்த நிகழ்வு மிகவும் உணர்ச்சிகரமான ஒன்றாக இருக்கும்.
ஏன் இது முக்கியத்துவம் வாய்ந்தது?
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் திருநங்கையர் இங்கு கூடுகிறார்கள். அவர்களின் சமூக அங்கீகாரம் மற்றும் உரிமைகளுக்கான ஒரு பெரிய தளமாக இது விளங்குகிறது.
அழகுப் போட்டி: திருவிழாவையொட்டி திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் (Miss Koovagam) உள்ளிட்ட பல்வேறு கலை மற்றும் கலாச்சாரப் போட்டிகள் அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளால் நடத்தப்படுகின்றன.












Click it and Unblock the Notifications