அதிமுகவுடன் தவெக கூட்டணிக்கு நோ சான்ஸ்! செங்கோட்டையன் அதிரடி! அப்படின்னா திமுகவுடனா?
கோபி: அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என தவெக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டசபைத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) முக்கிய நிர்வாகியும், கோபி தொகுதி வேட்பாளருமான செங்கோட்டையன், தேர்தல் முடிவுகள் குறித்து அதிரடியான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தமிழக மக்கள் மகிழ்வுடன் வாழும் காலத்தை எங்கள் கட்சி உருவாக்கும். 180 முதல் 200 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இந்த வெற்றி இந்தியாவையே வியக்க வைக்கும்," என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி
பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில்:
"அதிமுக-வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை; அதற்கான சாத்தியக்கூறுகள் முற்றிலுமாக மறுக்கப்படுகின்றன. மக்களிடையே த.வெ.க.விற்கு இருக்கும் வரவேற்பைப் பார்க்கும்போது, மற்றவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவைப்படாது," எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
நயினார் நாகேந்திரனுக்கு கடும் பதிலடி
த.வெ.க ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என விமர்சித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு செங்கோட்டையன் கடுமையான கண்டனம் தெரிவித்தார்.
"இது அவருக்கு இறுதித் தேர்தல். அவரது கட்சிப் பதவியே நீடிக்குமா என்பது சந்தேகம் தான். அவர் மீது பாஜக தலைமை தகுந்த நடவடிக்கை எடுக்கும்," என சாடினார்.
தலைவர் விஜய்க்காக உயிரையும் தருவோம்!
தேர்தலுக்குப் பின் சட்டமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பாக பனையூருக்கு அழைப்பது குறித்த கேள்விக்கு, "எங்கள் கட்சியினர் தலைவர் விஜய்க்காக உயிரையே தியாகம் செய்யத் தயாராக உள்ளனர். அவர்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது," என உருக்கமாகத் தெரிவித்தார்.
மேலும், த.வெ.க-விற்கு இளைஞர்களின் ஆதரவு பெருகி வருவதாகக் கூறிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-விற்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
"சாம்ராஜ்யம் அழியும்" - செங்கோட்டையன் எச்சரிக்கை
தனது பேச்சின் நிறைவாக, "சுயநலமும், கர்வமும் எங்கு இருக்கிறதோ, அங்கு அந்தச் சாம்ராஜ்யம் வீழும்" என்ற தனது வழக்கமான முழக்கத்தை முன்வைத்த அவர், மக்களின் தீர்ப்பு மே 4-ம் தேதி (நாளை) வெளியாகும்போது த.வெ.க-வின் பலம் உலகிற்குத் தெரியும் எனத் தெரிவித்தார்.
இவரது இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக ஈரோடு மற்றும் கோபி பகுதிகளில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அதிமுக 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த செங்கோட்டையன் ஒன்றிணைந்த அதிமுக என கோரியதால் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் ட்விஸ்ட்டாக தவெகவில் இணைந்தார். அங்கு அதிமுகவில் நடந்த கொடுமைகளை மீட்டிங்கில் பேசி பேசி அதிமுகவுக்கு எதிரான ஒரு அலையை தவெகவில் உருவாக்கினார். தற்போது தனது கோட்டையில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடுவதாலும் அவர் தொடர்ந்து 8 முறை வென்றிருப்பதாலும் அவர் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications