சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் – துணை சபாநாயகர் ரவிசங்கர்! விஜய் தேர்வு செய்த தவெக எம்எல்ஏக்களின் பின்னணி
சென்னை: தமிழக சட்டசபை சபநாயகராக ஜேசிடி பிரபாகரும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் இன்று பொறுப்பேற்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏக்களான இவர்கள் 2 பேரும் விஜய் முன்னிலையில் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். இவர்களை எதிர்த்து பிற கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று பொறுப்பேற்றனர். இந்நிலையில் தான் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் யார்? துணை சபாநாயகர் ரவிசங்கர் யார்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ளார். நேற்று சட்டசபை கூடியது. எம்எல்ஏக்கள் பதவியேற்று கொண்டனர். இதையடுத்து தமிழக சட்டசபைக்கான சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு நேற்று தான் வேட்புமனு தாக்கல் கடைசி நாளாகும்.
தவெக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் சபாநாயகர் பதவிக்கும், திருச்சி மாவட்டம் துறையூர் எம்எல்ஏ ரவிசங்கர் துணை சபாநாயகர் பதவிக்கும் முதல்வர் விஜய் முன்னிலையில் சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் மனுத்தாக்கல் செய்தனர். இவர்களை எதிர்த்து யாரும் மனுக்கள் தாக்கல் செய்யவில்லை.
சபாநாயகர் பதவியேற்பு
இதனால் தமிழக சட்டசபை சபாநாயகராக ஜேசிடி பிரபாகரும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து இன்று இவர்கள் 2 பேரும் சட்டசபையில் பொறுப்பேற்றனர்.
சட்டசபை சபாநாயகராக ஜேசிடி பிரபாகரை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபை முன்னவர் செங்கோட்டையன் ஆகியோர் அழைத்து சென்று சட்டசபை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். அதேபோல் துணை சபாநாயகராக ரவிசங்கர் போட்டியின்றி அறிவிக்கப்பட்டுள்ளதை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். இவர்களின் பின்னணி பற்றி இங்கு முழுமையாக பார்க்கலாம்.
சபாநாயகரின் பின்னணி
சபாநாயகரான ஜேசிடி பிரபாகர் அதிமுகவில் செயல்பட்டு வந்தார். அதிமுகவில் அமைப்பு செயலாளராக இருந்தவர். சென்னையில் உள்ள வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏவாக 3வது முறையாக தேர்வாகி உள்ளார். இவர் முதல் முறையாக 1980ம் ஆண்டில் அதிமுக சார்பில் வில்லிவாக்கம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்தார். அதன்பிறகு 1984, 1989ல் இந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அன்பழகன் - ஸ்டாலினை எதிர்த்தவர்
நீண்டகாலத்துக்கு பிறகு மீண்டும் 2011ம் ஆண்டில் வில்லிவாக்கம் தொகுதியில் ஜேசிடி பிரபாகர் களமிறங்கினார். திமுகவில் பொதுச்செயலாளராக இருந்த கே அன்பழகனை வீழ்த்தி கவனம் பெற்றார். அதன்பிறகு 2016ம் ஆண்டில் தொகுதி மாறி களமிறங்கினார். முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் ஜேசிடி பிரபாகர் தோல்வியடைந்தார். ஸ்டாலின் மொத்தம் 91,303 ஓட்டுகள் பெற்ற நிலையில் ஜேசிடி பிரபாகர் 53,573 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். பிறகு கடந்த 2021ம் ஆண்டில் வில்லிவாக்கம் தொகுதியில் களமிறங்கிய ஜேசிடி பிரபாகர் மீண்டும் தோல்வியடைந்தார்.
தொகுதி மாறி வெற்றி - சபாநாயகர்
அதன்பிறகு அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஓ பன்னீர் செல்வம் அணியில் செயல்பட்டு வந்தார். பிறகு ஓ பன்னீர் செல்வம் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி செயல்பட்டு வந்தார். பிறகு தான் இந்த ஆண்டு தொடக்கத்தில் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்தார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
துணை சபாநாயகரின் பின்னணி
துணை சபாநாயகராக தேர்வாகி உள்ள ரவிசங்கர் முதல் முறை எம்எல்ஏ ஆவார். இவர் திருச்சி மாவட்டம் துறையூர் சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இது தனித்தொகுதியாகும். இதனால் ரவிசங்கர் ஆதிதிராவிடர் (தலித்) சமுதாயத்தை சேர்ந்தவர்.இந்த தொகுதியில் ரவிசங்கர் மொத்தம் 66,263 வாக்குகள் பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சரோஜா 56,649 வாக்குகள் பெற்றார். இதனால் ரவிசங்கர் 9,614 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் லெனின் பிரசாத் 49,222 வாக்குகள் பெற்று 3ம் இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறங்கிய கவுசல்யா 8,436 வாக்குகளுடன் 4ம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications