வெட்டிப்புடுவேன்.. குத்திப்புடுவேன்.. என அமைச்சர் மிரட்டுகிறார்.. அதிமுக எம்.எல்.ஏ. பகிரங்க புகார்.!
விருதுநகர்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தமக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக சாத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் பகிரங்கப் புகார் தெரிவித்திருக்கிறார்.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவரே அமைச்சர் மீது கொலைமிரட்டல் புகார் கூறியிருப்பது தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
சாத்தூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராஜவர்மன் எம்.எல்.ஏ. தனது மனக்குமுறலை கொட்டியுள்ளார்.

கொலை மிரட்டல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது கொலைமிரட்டல் புகார் கூறினார். கடந்த 6 மாதமாக தன்னை வெட்டிப்புடுவேன்.. குத்திப்புடுவேன்.. என அமைச்சர் பேசி வருவதாகவும், கட்சியினர் மத்தியில் தன்னை தரக்குறைவாக நடத்துவதாகவும் ராஜவர்மன் தெரிவித்தார்.

மாவட்டச் செயலாளர்
விருதுநகர் அதிமுக மாவட்டச் செயலாளர் பதவி விவகாரத்தில் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தாம் எந்தப் பதவிக்கும் ஆசைப்படவில்லை எனப் பேசிய ராஜவர்மன், ஒரு அமைச்சர் இப்படி கொலைமிரட்டல் விடுக்கும் அளவுக்கு நடந்துகொள்ளலாமா என கட்சியினரிடம் நியாயம் கேட்டிருக்கிறார்.

இடைத்தேர்கல்
ஒரு காலத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் தான் இந்த ராஜவர்மன். கடந்த 2019 இடைத்தேர்தலில் சாத்தூர் தொகுதியில் ராஜவர்மனை போட்டியிட வைத்ததே ராஜேந்திரபாலாஜி தான். அவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இருவரும் ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை உடையவர்கள். இருவரும் மஞ்சள் சட்டை அணிந்துகொள்வதுடன் கையில் வண்ண வண்ண நிறங்களில் கயிறு கட்டிக்கொள்வார்கள்.

தலைமைக்கு தலைவலி
இதனிடையே அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பற்றி அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் பேசிய வீடியோ காட்சி முதலமைச்சரின் கவனத்திற்கும் சென்றிருக்கிறது. ஏற்கனவே ராஜேந்திரபாலாஜி மீது கடும் அதிருப்தியில் உள்ள துணை முதல்வர் ஓ.பி.எஸ். இந்த விவகாரத்தை அவ்வளவு சுலபமாக விடமாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் கொலை கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து அதிகரித்துவிட்டதாக ஏற்கனவே திமுக குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அமைச்சர் மீதான கொலைமிரட்டல் குற்றச்சாட்டு அரசுக்கு தலைவலியை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications