தமிழக ஏரி காக்க கரண்டியை கையில் எடுத்த அட்லாண்டா தமிழ்ப் பெண்கள்..! - பாரம்பரிய உணவுத் திருவிழா
அட்லாண்டா(யு.எஸ்): அட்லாண்டாவில் வசிக்கும் தமிழ்ப் பெண்களின் முயற்சியால் 11 ஆயிரம் டாலர்கள் நிதி திரட்டப்பட்டு தமிழக ஏரி புணரமைப்புத் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தமிழர்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களும், தமிழக நலன் காக்க பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டங்களிலும் பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

தமிழக விவசாயிகளின் நலனுக்காகவும் விவசாயத்தை மீட்கும் முயற்சிகளுக்காகவும் அவர்களுடைய கவனம் தற்போது திரும்பியுள்ளது.
வசந்த காலம் தொடங்கியதும் பூங்காக்களில் கூடுவதும் விளையாடுவதும் அமெரிக்காவில் வழக்கமான ஒன்றாகும். ஒரு பூங்காவில், விளையாட்டுக்களுடன் உணவுத் திருவிழாவும் நடத்தினால் என்ன என்று நான்கு பெண்கள் சிந்தித்தனர்.
அடேங்கப்பா.. இத்தனை உணவு வகைகளா?..

கண்ணாமூச்சி, பாண்டி, பல்லாங்குழி, தாயம், ,கபடி கும்மி. பூப்பறிக்க வருகிறோம், குலைகுலையா முந்திரிக்கா, ஆக்குபாக்கு, ஒரு குடம் தண்ணி ஊத்தி என பாரம்பரிய விளையாட்டுகளுடன் ஒரு மாலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு அல்பரெட்டா வடக்கு பூங்காவில் ஒன்று கூடினார்கள். குழந்தைகளும் பெரியவர்களும் விளையாடி மகிழ்ந்தனர்.
களைத்துப் போனவர்கள் தமிழக பாரம்பரிய உணவுகளை உண்டு பசியாறினர்.
கம்மங்கூழ். கேப்பைக்கூழ், உளுந்து முறுக்கு, தினை முறுக்கு, கடலை மாவு முறுக்கு, இட்லி, வடை, பணியாரம், கேசரியுடன் சுடச்சுட தோசையும் அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கம்மங்கூழுக்கும் கேப்பைக்கூழுக்கும் ருசியைக் கூட்ட பச்சை மிளகாய், வெங்காயம், மாங்காய் ஊறுகாய் இருந்தது.

சாதா தோசையுடன் முருங்கைக்கீரை தோசை, குதிரை வாலி சாமை தோசை, மசாலா தோசை, ஊத்தப்பம் என பல வகை தோசைகளுடன் மைதானம் களை கட்டியது
பருகுவதற்கு பானங்களாக நீர் மோர், பானகம், எலுமிச்சை பழ ஜூஸ் இருந்தன. தமிழகத் தண்ணீரை உறிஞ்சும் கோக், பெப்சிக்கு அட்லாண்டா தமிழர்களும் தடை விதித்து விட்டனர்.
பெண்கள் நாட்டின் கண்கள்..
இது அத்தனையும் வீட்டில் சமைத்து எடுத்து வரப்பட்ட உணவுகளாகும். ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளை தயாரித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

அனு, பாரதி, பொன்னி, ப்ரியா ஆகியோர் ஒருங்கிணைப்பில் அனைத்துப் பெண்களும் ஒன்றாகக் கூடி தங்கள் உழைப்பின் மூலமாகவே இந்த உணவுத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
பூங்காவில் சுடச் சுட தோசை சுடும் பணியை மட்டும் ஆண்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டனர் போலும். இந்த பெண்களின் பின்னால் அவர்களின் கணவன்மார்களின் ஒத்துழைப்பும் ஊக்கமும் பாராட்டுக்குரியதாகும்.
குறைவான விலையிலேயே உணவுகள் வழங்கப்பட்டன. பெரியவர்கள் குழந்தைகள் உட்பட 550 பேர் வருகை தந்திருந்தார்கள். உணவு விற்பனை மூலமாகவே 5 ஆயிரத்து நானூற்று 63 டாலர்களும் 81 சென்ட்களும் வசூலாகின.

அதே தொகைக்கு இணையாக அட்லாண்டாவில் வசிக்கும்,. சேலம் அம்மாபேட்டையைச் சார்ந்த அருள் - கவிதா தம்பதிகள் நன்கொடை வழங்கினார்கள். அதைச் சேர்த்து மொத்தம் 10 ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தியேழு டாலர்கள் , 62 சென்ட்கள் நிதி திரட்டப்பட்டது.
சேலம் அம்மாபேட் குமரகிர் ஏரி புணரமைப்பு..
இந்த நிதி அனைத்தும் சேலம் அம்மாபேட் குமரகிரி ஏரி புணரமைப்புக்காக வழங்கப்படுகிறது. சேலத்தில் இயங்கி வரும் பியுஷ் மானூஷின் SEED அமைப்புடன் இணைந்து இந்த பணி நடைபெறுகிறது.
பூமி நாளில் நடைபெற்ற இந்த உணவுத் திருநாளில் சாப்பாட்டுத் தட்டு, தண்ணீர் பாட்டில்கள் உட்பட அனைத்து ப்ளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்து விட்டனர்.

பாக்கு மட்டை தட்டு, பேப்ப்ர் டம்ளர் வரவழைக்கப் பட்டிருந்தது. அனைவரும் ஸ்பூன் உபயோகிக்காமல் கையில் எடுத்தே சாப்பிட்டனர்.
பாரம்பரிய உணவு சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு... அப்படியே ஏரியை சீரமைக்க பண உதவி செய்த மாதிரியும் ஆச்சு. அட்லாண்டா தமிழ்ப் பெண்கள் பெருமைக்குரியவர்கள்.
-இர தினகர்












Click it and Unblock the Notifications