மார்கழி பூஜை : திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்
திருப்பாவை பாடல் 18
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.
திருவெம்பாவை - பாடல் 18
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
பொருள்: பெண்ணே! அண்ணாமலையானின் தாமரை போன்ற திருவடிகளை, தேவர்கள் சென்று வணங்கும்போது , அவர்களுடைய திருமுடி மகுடங்களில் இருக்கும் பல வகையான இரத்தினங்களின் ஒளி குறைந்து தோன்றும். அது போல, காலையில் கதிரவனின் ஒளி எழும்பி இருளை நீக்கும்போது குளிர்ந்த ஒளியுடன் திகழ்ந்த விண்மீன்கள் ஒளி குறைந்து காணாமல் போகின்றன.
பெண்ணாகி, ஆணாகி, இரண்டு தன்மையும் இல்லாமல் ஆகி, மிகுந்த ஒளியுடைய வானமும், நிலமும் ஆகி, வேறு தன்மையாகவும் ஆகி, கண்களால் பருகி நிற்கும் அமுதமும் ஆகி நின்றான். திருவடிகளைப் பாடியவாறு, இந்த மலர்கள் நிறைந்த புனலில் குதித்து நீராடுவோம்.
திருப்பாவை - பாடல் 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.
பொருள்: குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?
திருவெம்பாவை பாடல் - 19
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போங்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க;
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க;
கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க;
இங்(கு)இப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்!
பொருள்: எங்கள் தலைவனே, "உன் கையிலுள்ள பிள்ளை உனக்கே சரண்' என்னும் பழமொழியைப் புதுப்பிக்கின்றோமென்று நீ சொல்லக் கூடியதை அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பஞ் செய்கின்றோம். நீ கேட்டருள்வாயாக. எமது நகில்கள், நினது அன்பரல்லாதார் புயங்களைத் தழுவாதொழிக. எங்கள் கைகள் உனக்கன்றி வேறு தேவர்க்கு எவ்வகையான தொண்டுஞ் செய்யாதொழிக. இரவும் பகலும் எங்கள் கண்கள் நின்னைத் தவிர வேறொன்றையும் காணாதொழிக. இந் நிலவுலகில் இம்முறையே எங்களுக்கு ஐயனே! நீ அருள் புரிவாயாயின், பகலவன், எத்திசையில் உதித்தால் எங்களுக்கு என்ன?












Click it and Unblock the Notifications