பாரதி பக்கம்
ஏப்ரல் 16, 2001
தாய்மாண்பு
பெண்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?
கண்டார்க்கு நகைப் பென்னும் உலக வாழக்கை
காதலெனும் கதையினுடைக் குழப்பமன்றோ?
உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவளென் றறியீரோ? உணர்ச்சி கெட்டீர்!
பண்டாய்ச்சி ஒளவை அன்னையும் பிதாவும்
பாரிடை முன்னறி தெய்வம் என்றாள் அன்றோ? (46)
தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வமுண்டோ?
தாய்பெண்ணே யல்லளோ? தமக்கை, தங்கை
வாய்க்கும்பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ?
மனைவியொருத் தியையடிமைப் படுத்த வேண்டித்
தாய்க்குலத்தை மழுதடிமைப் படுத்தலாமோ?
தாயைப்போலே பிள்ளை என்று முன்னோர்
வாக்குநன் றோ? பெண்மை அடிமை யுற்றால்
மக்களெல்லாம் அடிமையுறல் வியப்பொன் றாமோ? (47)
வீட்டிலுள்ள பழக்கமே நாட்டி லுண்டாம்
வீட்டினிலே தனக்கடிமை பிறராம் என்பான்,
நாட்டினிலே நாடோறும் முயன்றிடுவான் நலிந்து சாவான்:
காட்டிலுள்ள பறவைகள் போல் வாழ்வோம், அப்பா!
காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை:
பாட்டினிலே காதலைநான் பாடவேண்டிப்
பரமசிவன் பாதமலர் பணிகின் றேனே. (48)