பாரதி பக்கம்
வள்ளிப்பாட்டு - 1
எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ
குற வள்ளீ, சிறு கள்ளீ!
சரணங்கள்
1.(இந்த) நேரத்தி லேமலை வாரத்தி லேநதி
யோரத்தி லேயனைக் கூடி - நின்றன்
வீரத் தமிழச் சொல்லின் சாரத்தி லேமனம்
மிக்க மகிழ்ச்சி கொண்டாடி - குழல்
பாரத்தி லேஇத ழீரத்தி லேமுலை யோரத்திலே
அன்பு சூடி - நெஞ்சம்
ஆரத் தழுவி அமர நிலை பெற் றதன்
பயனை யின்று காண்பேன். (எந்த நேரமும்)
2.வெள்ளை நிலாவிற்கு வானத்தை மூடி
விரிந்து பொழிவது கண்டாய் - ஒளிக்
கொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக்
குறிப்பினி லேயொன்று பட்டு - நின்றன்
பிள்ளைக் கிளிமென் குதலையிலே மனம்
பின்ன மறச்செல்ல விட்டு - அடி
தெள்ளிய ஞானப் பெருஞ்செல்வ மே! நினைச்
சேர விரும்பினன் கண்டாய்! (எந்த நேரமும்)
3.வட்டங்க ளிட்டுங் குளமக லாத
மணிப்பெருந் தெப்பத்தைப் போலே - நினை
விட்டு விட்டுப்பல லீலைகள் செய்துநின்
மேனி தனைவிட லின்றி -
எட்டுத் திசையும் ஒளிர்திடுங் காலை இரவியைப்
போன்ற முகத்தாய்! - முத்தம்
இட்டுப் பலமுத்த மிட்டுப் பலமுத்தம் இட்டுனைச்
சேர்ந்திட வந்தேன் (எந்த நேரமும்)