பாரதி பக்கம்
மூன்று காதல்
தாளம்: திஸ்ர ராகம்
முதலாவது - சரஸ்வதி காதல்
பிள்ளைப் பிராயத்திலே - அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்குப்
பள்ளிப் படிப்பினிலே - மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணைமேல் - அவள்
வீணையுங் கையும் விரித்த முகமலர்
விள்ளும் பொருளமுதும் - கண்டேன்
வெள்ளை மனது பறி கொடுத்த தேனம்மா! (1)
ஆடிவரு கையிலே - அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்பாள், கையில்
ஏடு தரித்திருப்பாள் - அதில்
இங்கித மாகப் பதம்படிப் பாள், அதை
நாடி யருகணைந்தால் - பல
ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள், இன்று
கூடிமகிழ்வ மென்றால் - விழிக்
கோணத்தி லேநகை காட்டிச் செல் வாளம்மா! (2)
ஆற்றங் கரைதனிலே - தனி
யானதோர் மண்டப மீதினிலே, தென்றற்
காற்றை நுகர்ந்திருந்தேன் - அங்குக்
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தான், அதை
ஏற்று மனமகிழ்ந்தே - அடி
என்னோ டிணங்கி மணம்புரிவாய் என்று
போற்றிய போதினிலே - இளம்
புன்னகை பூத்து மறைந்துவிட் டாளம்மா! (3)
சித்தந் தளர்ந்ததுண்சேடா? - கலைத்
தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்து பிடித்தது போல் - பகற்
பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால் - பிற
வாஞ்சை யுண்டோ? - வய தங்ஙன மேயிரு
பத்திரண் டாமளவும் - வெள்ளைப்
பண்மகள் காதலைப் பற்றிநின் றேனம்மா! (4)












Click it and Unblock the Notifications