பாரதி பக்கம்
ஊழிக் கூத்து
வெளியி லிரத்தக் களியொடு பூதம்பாடப் - பாட்டின்
அடிபடு பொருளுன் அடிபடு மொலியிற் கூடக் - களித்
தாடுங் காளீ! சாமுண் டீ! கங் காளீ!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை. (1)
ஐந்நூறு பூதம் சிந்திப் போயொன் றாகப் - பின்னர்
அதுவும் சக்திக் சுதியில் மூழ்கிப் போக - அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை தழுவும் வேகத் -தோடே
முடியர் நடனம் புரிவாய், அடுதீ சொரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச்செய்தாய் என்னை. (2)
பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச் - சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய - அங்கே
ஊழாம் பேய்தான் -ஓஹோஹோ வென் றலைய வெறித்
துறுமித் திரிவாய், செருவெங் கூத்தே புரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை. (3)
சக்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச் - சட்டச்
சடசட சட்டென் றுடைபடு தாளங்கொட்டி அங்கே
எத்திக் கினிலும் நின்விழியனல் போய் எட்டித் - தானே
எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை. (4)
காலந் தொடுநிர் மூலம் படுமூ வுலகமும் - அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும் சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் தினமும் விலகும் - கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை. (5)