கடலே !
நீள்கடலே! பெருங்கடலே! தமிழன் வாழ்வில்
நீங்காத குற்றம் ஏன் இழைத்தாய்? உன்றன்
தோள்மீதில் ஏறியன்று கடந்தான் என்ற
சொல்லுக்கோ பழி வாங்கிக் கொண்டாய்? அன்றே
வாள்கொண்டு போர்கண்ட மறவன் வாழ்வின்
வரலாற்றுக் காட்சிகளை நூல்கள் தம்மை
கோள்கொண்டே அழித்ததும் ஏன்? அவனை என்றும்
குனிந்து எழாப் புழுவாக்க வழி ஏன் கண்டாய்?
"யாழ்அழித்தாய்! "சிற்பங்கள் அழித்தாய்! "பண்டை
அருங்கலைகள் எத்தனையோ அழித்தாய்! சான்றோர்
சூழ்ந்திருந்த "தற்சங்கம் அழித்தாய்! எங்கள்
"தென்மதுரை "கபாடபுரம் அழித்தாய்! எங்கள்
வாழ்நாளில் உனைக்காணா மரபோர் எல்லாம்
வந்து எம்மை ஆழ்வதற்குத் துணைஏன் செய்தாய்?
பாழ், பாழ், பாழ் எல்லாமே! தமிழன் என்றும்
பரதேசியாய் அலைய வழி ஏன் கண்டாய்?
"குமரிக்கோ டழித்தாய்! தமிழர் வெற்றி
கூறிவந்த "பஃறுளியை உண்டாய்! நாங்கள்
எமதென்றே மார்தட்டிச் சொல்லவைக்கும்
"இலக்கியங்கள் எத்தனையோ ஒழித்தாய்! அன்று
சுமை சுமந்த கலங்களெலாம் குவித்த "தொண்டித்
துறையினையும் "கொற்கையையும் சுருட்டிக் கொண்டாய்!
சமர்கண்ட தமிழனின்று கோழை யாகிச்
சரித்திரத்தை மறப்பதற்கே வழிஏன் கண்டாய்?
எல்லையிலாப் பசியோடு தமிழன் வாழ்ந்த
"இலெமூரியாக் கண்டத்தை விழுங்கிக் கொண்டாய்!
செல்லரித்த படம்போல, விழியிருந்து
சிந்துகின்ற துளிபோல, ஈழ நாட்டைப்
பொல்லாத கடலே! ஏன் பிரித்துப் போட்டாய்?
போர்ச் சேற்றால் அம்மண்ணோ சிவந்த தின்றோ!
எல்லோரும் தனிநாட்டில் மகிழும் போது,
என்தமிழன் விழிஏங்க வழி ஏன் கண்டாய்?