கிரிக்கெட்: தலைகுனிவு யாருக்கு

Subscribe to Oneindia Tamil


உலகக் கிரிக்கெட் கோப்பைப் போட்டித் திருவிழா ஏறக்குறைய முடிவடையும் நிலைக்கு எட்டிவிட்டது. நோஞ்சான் அணி எனக் குறைவாக மதிப்பிட்ட அணிகள் எல்லாம் விளாசித் தள்ளி தப்புக் கணக்குப் போட்டவர்களை எல்லாம் அதிர்ச்சி வைத்தியத்துக்குள்ளாக்கியது இந்த உலகக் கோப்பையின் ஒரு விசேஷம்.

அதோடு பெரிய ஜாம்பவான்களாக கணிக்கப்பட்டவர்கள் எல்லாம் போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு என்கிற கதையாக சந்தடியில்லாமல் திரும்பி வந்துள்ளனர்.

மற்றவர்கள் எல்லாம் இந்தியாவின் தோல்வியை மறந்து விட்டாலும் இந்திய இளைஞர்கள் மட்டும் இந்த துக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை. இந்த இளைஞர்களின் முகங்கள் எல்லாம் கடந்த சில நாட்களாக களையிழந்தும், பொலிவிழந்தும் காணப்படுகின்றன.

வெளிநாட்டிலிருந்து எவரேனும் யுத்தத்தில் இந்தியா தோற்றுவிட்டதோ என கணக்குப் போடும் அளவுக்கு சோகம் ததும்பி வழிகிறது. அலுவலகம், சந்தை, பேருந்து, இரயில் என எல்லா இடங்களிலும் இதைப் பற்றிய கவலைகளே பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

சென்ற மாதம் வரை கதாநாயகர்களாக போற்றப்பட்ட கிரிக்கெட் வீரர்களின் வீடுகளைத் தாக்குவதும், அவர்களின் கொடும்பாவியை எரிப்பதும், பொது இடங்களில் மொட்டை போட்டுக் கொள்வதுமாக தங்களின் கோபத்தைத் தேசப்பற்று மிக்க இளைஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.

படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடின்றி அனைவரும் ஒட்டுமொத்தமாக சொல்லும் குற்றச்சாட்டு ஒன்றுதான். அதாவது, இந்திய வீரர்கள் தேசப்பற்றோடு விளையாடவில்லை. நாட்டின் மீது அக்கறை இருந்தால் இப்படி விளையாடி இருப்பார்களா?. உலக அரங்கில் இந்தியாவின நன்மதிப்பைக் குலைத்துடன், தேசத்துக்குத் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.

உண்மையில் கிரிக்கெட் வீரர்கள் நாட்டுக்கு அநீதி இழைத்து விட்டார்களா, தேசம் அவமானத்தால் குன்றி நிற்கிறதா என்ற கேள்வி நடுநிலையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கிரிக்கெட் விளையாட்டு என்பது தேசத்தின் மீதான பக்தியின் வெளிப்பாடு என்ற மாயத் தோற்றத்தை உண்டாக்கிய முதற்பெருமை இந்திய அரசாங்கத்தின் தொலைக் காட்சியையே சாரும்.

25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு தொலைக்காட்சி தொடங்கி வைத்த கிரிக்கெட் வெறி என்னும் திருப்பணியை, தொண்ணூறுகளில் தலையெடுத்த தனியார் தொலைக்காட்சிகள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டன.

இந்தியாவும், பாகிஸ்தானும் ஆடும் போதெல்லாம் அதை ஒரு போர்ச் சம்பவம் போல் சித்திரித்த பெருமை இந்த ஊடகங்களையே சாரும்.

கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் மெல்ல, மெல்ல கடவுளுக்கும், கதாநாயகர்களுக்கும் இணையாக ரசிகர்களால் உருவாக்கப்பட்டு வந்தாலும், அவ்வீரர்களின் மீது தான் இருந்தது. கிரிக்கெட் ஆடும் காலம் தவிர, மீதி நேரத்தை அடுத்த ஆட்டத்திற்குத் தயார் செய்யாமல் விளம்பரங்கள், நடிகைகள் பின்னால் சுற்றுவது என பெரும்பாலான வீரர்கள் வளர்ந்து கொண்டிருந்தனர்.

பணம், பணம் என்ற மந்திரத்தை விடாமல் உச்சரித்துக் கொண்டிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் தேசப்பற்றை வெளிப்படுத்துவதற்காகவும், நாட்டின் மானம் காக்கவுமே தாங்கள் விளையாடுவதாக ஒருபோதும் சொன்னது இல்லை.

இவ்வீரர்கள் அந்நிய நாடுகளில் விளையாடிவிட்டுத் திரும்பும்போது இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணத்துடன், கோடிக்கணக்கான மதிப்புள்ள கார் போன்ற பொருட்களையும் இந்தியாவுக்கு எடுத்து வருவார்கள்.

கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இவ்வீரர்கள் அப்பொருள்களுக்கு முறையாக சுங்கவரியைக் கூட செலுத்த மாட்டார்கள் என்பதைப் பலமுறை பத்திரிக்கைகள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.

இதெல்லாவற்றையும் மோசமான ஒன்று கிரிக்கெட் சூதாட்டத்தில் இவர்களுக்கு உள்ள தொடர்பு. மில்லியன், பில்லியன் கணக்கில் பணம் புரளும் கிரிக்கெட் சூதாட்டத்திலும் இவ்வீரர்களின் பெயர் அவ்வப்போது அரசல்புரசலாக அடிப்பட்டதுண்டு.

இப்படி தங்களின் எந்த நடவடிக்கையிலும் தேசப்பற்றினைப் பின்பற்றாததுடன், அது பற்றி மூச்சுக்கூட விடாத கிரிக்கெட் வீரர்களைப் பற்றி நம் ரசிகர்கள் ஏன் இவ்வளவு கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் புரியவில்லை.

இப்போது நடக்கும் உலகக் கோப்பைப் போட்டியின் வெற்றிக்காக யாக கேள்விகள், பிரார்த்தனைகள், அங்கபிரதட்சணங்கள் எல்லாம் ரசிகமணிகளின் சார்பில் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்டன.

வீட்டில் தேர்வுக்குப் பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்த போதும், தலைபோகிற காரியமாக இரவெல்லாம் கண்விழித்து கிரிக்கெட் போட்டியைப் போட்டியைப் பார்த்த பெற்றோர்கள், முதியவர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் என ஆய்வுகள் சொல்லுகின்றன.

இரவெல்லாம் தொடர்ச்சியாக நமது இரசிகத் திலகங்கள் போட்டியைப் பார்த்து இரசித்து, அழுது செலவு செய்த மின்சாரத்தைச் சேமித்திருந்தால் பல நாட்களுக்கு இந்தியா முழுமைக்கும் பயன்படுத்தியிருக்கலாம்.

நம் நாட்டில் இப்படி அழுகுரல் கேட்கும் இந்த நேரத்தில், அண்டை நாடான சீனாவில் 2008ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் மும்முரத்தில் அந்நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. சொந்த மண்ணில் பிற நாட்டு அணிகளை வீழ்த்துவதற்காக, உடலுக்கு வலுசேர்க்கும் பல்வேறு அர்த்தமுள்ள விளையாட்டுப் போட்டிகளில் தங்கள் நாட்டு இளைஞர்களை இறக்கி அவர்களைத் தீவிர பயிற்சியிலும் சீனா ஈடுப்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கு எந்த அளவுக்கு இந்தியா தயாராக உள்ளது, சூதாட்டமும், கொலைக் குற்றங்களும் நிகழும் கிரிக்கெட்டுக்காக யாகம் நடத்திய இந்திய இளைஞர்கள் ஒலிம்பிக் போட்டிக்காக எந்தக் கோயிலில் பிரார்த்தனை செய்தார்கள், வெறும் ஏழெட்டு நாடுகள் கலந்து கொள்ளும் கிரிக்கெட் போட்டியில் நம் வீரர்கள் தோற்றுப் போனதற்காக நாட்டின் மானமே போய்விட்டதென கதறும் இந்தியர்கள்,

ஏறத்தாழ இந்த உலக உருண்டையில் இருக்கும் பெரும்பாலான நாடுகள் பங்கு கொள்ளும் ஒலிம்பி்க் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் ஒரு வெண்கலப் பதக்கம் கூட வாங்காமல் கடந்த காலங்களில் வெறுங்கையோடு வந்தபோது அது பற்றி மருந்துக்குக் கூட கருத்து தெரிவித்ததோ, கவலைப்பட்டதோ இல்லை என்பது தான் உண்மை.

பல்வேறு இனங்கள் கூடி வாழும் இந்த மண்ணில் உலக நாடுகளுக்கு சவால் விடக்கூடிய வீர தீரமுள்ள விளையாட்டுகள் எத்தனையோ உள்ளன. ஒரு காலத்தில் ஹாக்கியை உயிராக மதித்து விளையாடிய பஞ்சாபியர்களும், கபடி, ஓட்டப்பந்தயத்தில் கொடி கட்டிப்பறந்த தமிழர்களும்,

கால்பந்து போன்ற ஆட்டங்களில் முத்திரைப் பதித்த இதர இனங்களும் இன்றைக்கு முடக்குவாதம் வந்தது போல் பரிதாப நிலையில் உள்ளனர். அரசின் ஆதரவு, ஊடகங்களின் கவனம் எல்லாம் இழந்ததால் வந்த வினை இது.

200 ஆண்டுகளுக்கு முன் மலேசிய மண்ணுக்குத் தோட்டத் தொழிலாளர்களாக உழைக்கப் போனவர்களின் வாரிசுகள் எல்லாம் சிலம்பம் என்னும் அருமையான கலையை மீட்டெடுத்துப் பயின்று வருவதோடு, ஒலிம்பிக்கில் அவ்விளையாட்டைச் சேர்க்கவும் முழுமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வாருங்கள் இளைஞர்களே! நாமும் கிராமங்கள் தோறும் செல்வோம்; இழந்த நம் விளையாட்டுகளை மீண்டும் பயில்வோம், வலுவிழந்து, பொலிவிழந்து நிற்கும் எண்ணற்ற இளைஞர்களைப் போதை விளையாட்டிலிருந்து மீட்டெடுத்து மண்ணின் மணம் வீசும் விளையாட்டுகளில் ஈடுபடுத்துவோம்.

நம்மை அடிமைப்படுத்திய வெள்ளைக்காரனை அறுபதாண்டுகளுக்கு முன்பே விரட்டி விட்டோம், அவன் கொண்டு வந்த வெட்டி விளையாட்டை மட்டும் வீணாகப் பிடித்துக் கொண்டு அழுவதை நிறுத்தாத வரையில் இந்தியர்கள் தலைநிமிர்ந்து ஏது?

(கட்டுரையாளர் திரு. இரா. குறிஞ்சிவேந்தன், புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளர் ஆவார்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+