கம்பன் திருநாள்-காரைக்குடியில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
காரைக்குடி: காரைக்குடியில் கம்பன் திருநாளையொட்டி ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 70ம் ஆண்டு கம்பன் திருநாளையொட்டி வரும் ஜனவரி 6ம் தேதியன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கம்ப ராமாயணம் குறித்த பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.
அன்று காலை 10 மணிக்கு கம்ப ராமாயணத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியர்களுக்கு பாலகாண்டம்-அரசியல் படலத்தில் 17 பாடல்களும், 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியர்களுக்கு அயோத்தியா காண்டம்-பள்ளிப்படை படலத்தில் 30 பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியும் நடைபெறுகிறது.
கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கம்பனில் அறிவியல், கம்பனில் கலையியல், கம்பனில் மெய்யியல் என்ற தலைப்புகளில் கட்டுரைப் போட்டிகள் நடைபெறும்.
பிற்பகல் 2 மணிக்கு கம்பனில் திருக்குறளின் குரல், கம்பனில் திவ்யபிரபந்த சாரம், கம்பனில் கீதையின் பாதை என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டிகளும், 3 மணிக்கு கற்றதனால் ஆயபயன் அறன் எனப்பட்டதே, வினைத்திட்டம் ஆகிய தலைப்புகளில் திருக்குறள் பேச்சுப் போட்டியும் நடைபெறும்.
போட்டிகளின் முடிவில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் 2008 மார்ச் 19ம் தேதி நடைபெறும் கம்பன் திருநாள் விழாவில் வழங்கப்படும்.
மேலும் இதுகுறித்து விவரங்களுக்கும், ஒப்புவித்தல் போட்டி பாடல் பகுதி வேண்டுவோர் காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது 04565-237600, 04565-233600 என்ற எண்களில் தொடர்பு விவரங்களை கேட்டுக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications