கலைக்கூடம் ஆனது தாகூர் வீடு
வங்கக் கவி தாகூர், நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் ஆவார். இவர் கடந்த 1919ம் ஆண்டு மேகாலய மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ப்ரூக்சைட் இல்லத்தில் தங்கி ஷெஷர் கொபிதா என்ற நூலை எழுதினார்.
உம்சிர்பி ஓடையின் அருகே, மலைப் பகுதியில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இந்த இல்லம் அமைந்துள்ளது. சாதாரணமானவர்களுக்கே இந்த இடத்தைப் பார்த்தால் கவிதை அருவி போல பீறிட்டெழும். அப்படி இருக்கையில் தாகூர் போன்ற கவி மேதைகளைப் பற்றிசத் சொல்ல வேண்டியதில்லை. அதை நிரூபிக்கும் வகையில் ஷெஷர் கொபிதா நூல் அமைந்துள்ளது.
இந்த இடத்தின் அழகில் மெய் மறந்த தாகூர் தனது வாழ்நாளில் 3 முறை இங்கு வந்து ப்ரூக்சைட் இல்லத்தில் தங்கி கவிதைகளை வடித்துள்ளார். இந்த இடத்தின் அழகை வர்ணித்து, ஷில்லாங்கிலிருந்து ஒரு கடிதம் என்ற கவிதையையும் அவர் வடித்துள்ளார்.
இங்கு தாகூர் தங்கியிருந்தபோது பன்படுத்திய மேசை திரிபுரா மாளிகையில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த இல்லம் கலைக்கூடமாக மாற்றப்பட்டுள்ளது. ரவீந்திரநாத் தாகூர் கலைக்கூடம் என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மேகாலய மாநில முதல்வர் லபாங் வெளியிட்டுள்ளார்.
இந்த இல்லத்தையும், இல்லத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிகளையும், கொல்கத்தா விக்டோரியா நினைவு இல்லத்துடன் இணைந்து மேம்படுத்தவும் முதல்வர் லபாங் உத்தரவிட்டுள்ளார்.
மலைமேட்டில் அமைந்துள்ள இந்த கலைக்கூடம் நிச்சயம் சுற்றுலாப் பயணிகளையும், இயற்கைக் காதலர்களையும் வசீகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.