தமிழில் மட்டுமே அரசாணைகள்!
தலைமை செயலகத்தில் வெளியிடப்படும் ஆணைகளை தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற முதல்வர் கருணாநிதியின் உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ் ஆட்சி மொழி ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தலைமை செயலகத்தில் மண்டல துணை இயக்குனர்கள், மாவட்ட உதவி இயக்குனர்கள், தமிழ் வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆகியோர் இணைந்து ஒரே நேரத்தில் தமிழ் ஆட்சி மொழி ஆய்வு மேற்கொள்கின்றனர்.
இனி தலைமை செயலகத்தில் வெளியிடப்படும் ஆணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்றும், சுற்றாணை குறிப்புகள், கருத்துரைகள், கணினியில் பயன்படும் மென் பொருள்கள் ஆகியவை முழுமையும் தமிழில் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தலைமை செயலாளர் தலைமையில் மாதந்தோறும் நடைபெறும் செயலாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் தலைமை செயலகத்தில் தமிழ் பயன்படுத்தப்படவும், துறைச் செயலாளர்கள் தங்களது துறைகளில் ஆட்சிமொழி தமிழ் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
துறை அமைச்சர்கள் அனுமதியின்றி ஆங்கிலத்தை அதிகாரிகள் பயன்படுத்தக் கூடாது.
இந்த உத்தரவுகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், தலைமை செயலகத்துறைகளில் தமிழ் ஆட்சி மொழி ஆய்வு உடனடியாக மேற்கொள்ளப்படுகிறது.
மண்டலத்துணை இயக்குனர்கள், மாவட்ட உதவி இயக்குனர்கள் ஆகியோர் மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு நேற்று எழும்பூர் தமிழ் வளர்ச்சி வளாகத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை செயலாளர் கோ.சந்தானம், தமிழ் வளர்ச்சி இயக்குனர் ராசேந்திரன், தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் வை.கண்ணபுரக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிலையி்ல் தலைமைச் செயலகத்தில் தமிழ் ஆட்சிமொழி ஆய்வுக் கூட்டம் 26ம் தேதி (இன்று) முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. இதில் முதற்கட்டமாக 17 துறைகளின் அதிகாரிகள் பங்கேற்பர் என்று கூறப்பட்டுள்ளது.