கலை இலக்கிய திருவிழா
தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 9 நாட்களுக்கு கலை இலக்கிய திருவிழா சென்னையில் நடைபெறுகிறது. கவிஞர் கனிமொழி கருணாநிதி குத்து விளக்கேற்றி இதைத் தொடங்கி வைக்கிறார்.
தி.நகர் வாணி மஹாலில் இந்த திருவிழா நடைபெறவுள்ளது. வருகிற 29ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை இந்த கலை இலக்கிய திருவிழா நடைபெறுகிறது. 29ம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த விழாவை கனிமொழி, குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.
முதல் நாளில், திராவிட இயக்கப் படைப்பாளிகளில் சிலர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார்.
பேராசிரியர்கள் சுப.வீரபாண்டின், இளங்கோவன், பன்னீர்செல்வன் ஆகியோர் பேசுகின்றனர்.
30ம் தேதி தெருக்கூத்து திருவிழா நடைபெறுகிறது. இதற்கு உணவுத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு தலைமை தாங்குகிறார்.
31ம் தேதி நாதசுரத் திருவிழா நடைபெறும். அதற்கு அமைச்சர் சுரேஷ்ராஜன் தலைமை தாங்குகிறார்.
ஏப்ரல் 1ம் தேதி தமிழிசை விழா நடைபெறுகிறது. இதற்கு விழா செயலாளர் வெ.இறையன்பு தலைமை தாங்குகிறார்.
2ம் தேதி தேவாரம், திருவருட்பா இசை விழா நடக்கிறது. இதற்கு இயல், இசை நாடக மன்ற தலைவர் ராம.நாராயணன் தலைமை தாங்குகிறார்.
3ம் தேதி தவில் நாதஸ்வர கலை விழா கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெறும்.
4ம் தேதி மகாகவி பாரதி விழா நடைபெறும். இதற்கு சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தலைமை தாங்குகிறார்.
5ம் தேதி ஜீவா நூற்றாண்டு விழா மகளிர் கவியரங்கம் நடைபெறுகிறது. அமைச்சர் பரிதி இளம்வழுதி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, எழுத்தாளர் ஜெயகாந்தன் பங்கேற்கின்றனர்.
கடைசி நாளான 6ம் தேதி தேவாரம் பாடினால் தில்லையம்பலம் தீட்டாகுமா என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெறும். இதற்கு மத்திய அமைச்சர் ராசா தலைமை தாங்குகிறார்.












Click it and Unblock the Notifications