ரியாத்தில் பாவேந்தர் நினைவு விழா
ரியாத் நகரில், பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு விழா வெகு விமரிசையாக நடந்தேறியது.
ரியாத் தமிழ்ச்சங்கம் அமைக்கப்பட்ட பிறகு அதன் ஒரு அங்கமான எழுத்துக் கூடம் மாதந்தோறும் இரண்டு சந்திப்புகளை
ஒன்றுவிட்ட வெள்ளிதோறும் நிகழ்த்தி வருகிறது.
அந்த எழுத்துக்கூடம் வாயிலாக பாவேந்தர் பாரதிதாசன், மகாகவி பாரதியார் இவர்களின் நினைவு நாளன்று சிறப்பு நிகழ்ச்சிகள் இந்தியத் தூதரக வளாக அரங்கினுள்ளும் மற்றும் எழுத்துக்கூட சந்திப்புகள் நிகழும் இடத்திலும் கடந்த 2 ஆண்டுளாக சிறப்புற நடந்து வருகிறது.
இந்த ஆண்டு பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு நாளை தம் இல்லத்திலேயே நடத்த இந்திய தூதர் விருப்பம் தெரிவித்தார்.
இதையடுத்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நாக.இளங்கோவன் தலைமையில் விழாவுக்கான ஏற்பாடு நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை தூதர் இல்லத்தில் நிகழ்ச்சி நடந்தது.
பாவேந்தரின் புகைப்படத்துக்கு தூதர் சந்தன மாலையிட்டு மரியாதை செய்ய மாசிலாமணி தூதருக்கு, விழாக்குழு சார்பில் சந்தன மாலையிட்டார்.
முதலில் வெற்றிவேல் வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் நாக.இளங்கோவன் பாவேந்தரைப் புகழ்ந்து எழுதிய ஒரு கவிதையை பின்னணி இசை அமைத்து மடிக்கணிணி மூலம் ஒலிக்க விட்டார்.
அடுத்ததாக பாவேந்தரின் படைப்புகளை பல பிரிவுகளில் வகைப்படுத்தி சுவாமி நாதன், பாலமுகுந்தன், பகுருதீன், ஷாஜஹான், மாசிலாமணி உள்ளிட்டோர் பேசினர்.
நிறைவாக ஜெயசீலன் நன்றியுரை நிகழ்த்தினார்.