ஊட்டி கோடை விழா: இன்று படகு போட்டி
நீலகிரி மாவட்டத்தில் வருடம் தோறும் மே மாதம் கோடை விழா கொண்டாடப்படும். இந்த விழா நேற்று தொடங்கி வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.
கோடை விழாவை முன்னிட்டு தமிழக கதர்வாரிய அமைச்சர் ராமச்சந்திரன் ரோஜா கண்காட்சியை தொடங்கி வைத்தார். கலெக்டர் ஆனந்த் ராவ் விஷ்ணு பாட்டீல், வேளாண் துறை செயலர் சுர்ஜித் சவுத்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்காட்சிக்காக ஊட்டி ரோஜா பூங்காவில் 40,000 ரோஜாக்களால் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்தியா மேப், ராட்சத பூக்கூடை, ரங்கோலி கோலங்கள் என்று பல்வேறு வடிவங்கள் ரோஜாக்களால் அமைக்கப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான ரக ரோஜா மலர் செடிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இது சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது.
ரோஜா பூவில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள், ஒயின், குல்கந்த், மில்க் ஷேக், ஜூஸ் ஆகியவை விற்பனை செய்யப்பட்டன. கண்காட்சியையொட்டி ராணுவ பேண்டு வாத்தியங்களின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.
கோடை விழாவை பார்க்க அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்துள்ளனர். 2 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சி இன்று முடிகிறது.
மேலும் கோடை விழாவையொட்டி நேற்று காலை காலை 11 மணிக்கு பைக்காரா படகு இல்லத்தில் படகு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோடை விழா நிறைவன்று பரிசு வழங்கப்படுகிறது.
இன்று 14ம் தேதி ஊட்டி படகு இல்லத்தில் படகு போட்டி நடைபெறுகிறது.
15ம் தேதி கார்கள் அணி வகுப்பு நடைபெறும்.
17, 18ம் தேதிகளில் பொதுவான மலர் கண்காட்சி துவங்குகிறது. அப்போது பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜின் இன்னிசை கச்சேரி நடக்கிறது.
24, 25ம் தேதி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி நடக்கிறது.
31ம் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி விழா நடக்கிறது.
இன்று முதல் 18ம் தேதி வரை ஊட்டி லாலி இனஸ்டியூட்டில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது.
இதை பார்க்க சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு அதிகளவில் வரத் தொடங்கியுள்ளனர்.