ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் உள்ளாட்சிகள்!
மத்திய அரசின் தேசிய வேலை உத்தரவாத திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்காமல் இயந்திரங்களைப் பயன்படுத்தி, ஏழைத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் வேலையை பல ஊராட்சி அமைப்புகள் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏழைத் தொழிலாளர்களுக்கு வேலை தரும் பொருட்டு மத்திய அரசு தேசிய வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டத்தைக் கொண்டு வந்தது.
நெல்லை, கரூர், திருவாரூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கடலூர், நாகப்பட்டிணம், திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களில் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிராமப்புற வறுமையை போக்குவதற்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும். ஒரு நாளைக்கு 7 மணி நேரம் பணியாற்ற வேண்டும். ஒரு நாளுக்கு கூலியாக ரூ.80 வழங்கப்படும்.
ஆண்கள், பெண்கள் இந்த வேலைக்கு ஈடுபடுத்தப்படுவர். மனித சக்தியால் மட்டுமே இந்த பணி மேற்கொள்ளப்படவேண்டும். இயந்திரங்களை பயன்படுத்த அனுமதி இல்லை. நெல்லை மாவட்டத்தில் இந்த திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் 425 பஞ்சாயத்துகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் பெரும்பாலான கிராமங்களில் விவசாயிகளுக்கு பஞ். தலைவர்கள், ஊழியர்கள் கூலியை குறைத்து வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கீழமூன்னீர் பள்ளம் விவசாயிகள் கலெக்டர் பொறுப்பு சீனிவாசனிடம் புகார் அளித்தனர். அவர்கள் கூறுகையில், கீழ முன்னீர்பள்ளத்தில் கடந்த 5 மாதங்களாக 160 பேர் வேலைக்கு உறுதி திட்டத்தில் வேலை செய்து வருகிறோம். ஆரம்ப காலத்தில் ஒருநாள் கூலியாக ரூ.80 வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக தினக் கூலியாக ரூ.50 முதல் 53 தான் வழங்கப்பட்டு வருகிறது.
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த குறைந்த ஊதியத்தையும் வாரம்தோறும் சரியாக வழங்காமல் மெகா சுருட்டல் நடக்கிறது. இந்த திட்டத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்.
குறைந்த கூலி வழங்குவதால் குடும்பத்திற்கு தேவையான செலவுகளை மேற்கொள்ள முடியவில்லை. விவசாயிகளின் நன்மைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் கண் துடைப்பாக உள்ளது. எனவே விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள ரூ.80 தினக்கூலி வழங்க வேண்டும் என்றனர்.
மேலும் இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல ஊராட்சி மன்ற பகுதிகளிலும் முறைகேடுகள் அரங்கேறி வருகின்றன. இம்மாவட்டத்தில் முதன்முதலில் பெரியபிள்ளைவலசை கிராமத்தில் நடந்த முறைகேட்டினால் பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதும் குறிப்பிடத்தக்கது.