கோத்தகிரி நூலகத்துக்கு கூடுதல் கட்டடம்
கோத்தகிரி: கோத்தகிரி கிளை நூலகத்துக்கு கூடுதல் கட்ட ஏற்பாடு செய்யப்படும் சட்டப் பேரவை நூலகக் குழு உறுதியளித்துள்ளது.
சட்டப்பேரவை நூலகக் குழுவினர் வியாழக்கிழமை கோத்தகிரிக்கு வருகை தந்தனர். சட்டப்பேரவை நூலகக் குழுத் தலைவரும், எம்எல்ஏவுமான கோவிந்தசாமி மற்றும் உறுப்பினர்கள் சிவானந்தம், ஜெயராமன், நெடுஞ்செழியன், கமலாம்பாள் ஆகியோர் இக் குழுவில் உள்ளனர். நூலகர் த.பி.ரவி வரவேற்றார்.
கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டமும் சிறப்பாக இயங்குவதாகவும், நூலக வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளை அரசிடம் பெற்றுத் தருவதாகவும் குழுத் தலைவர் கோவிந்தசாமி உறுதியளித்தார்.
நூலகத்தை கணினி மயமாக்குதல், கூடுதல் கட்டடம், நூல்களை அடுக்கிவைக்க அலமாரி, இருக்கைகள், மேசைகள் மற்றும் நூலகப் பணியாளர்கள் நியமிக்கக் கோரி வாசகர் வட்டத் தலைவர் ராஜன் மனு அளித்தார்.
மாவட்ட நூலகர் (பொ) ஜோதிமணி, வாசகர் வட்ட கௌரவ ஆலோசகர்கள் சந்திரகுமார், புலவர் வே.ஜே.தாமஸ், துணைத் தலைவர் கௌரி வரதராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.