தமிழ் 'ஸ்பெக்ட்ரம்' இதழ் விரைவில் வெளியீடு
திருச்சி: மேலை நாடுகளில் வெளியாகும் 'ஸ்பெக்ட்ரம்' என்ற அறிவியல், தொழில்நுட்ப இதழை தமிழில் மொழி பெயர்த்து தமிழ் 'ஸ்பெக்ட்ரம்' என்ற இதழ் சில மாதங்களில் வெளியிடப்படவுள்ளது என்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மு. பொன்னவைக்கோ கூறியுள்ளார்..
பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், நாட்டிலேயே முதன் முறையாகப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 6 ஆண்டு கால எம்.டெக்., 5 ஆண்டு கால ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., 5 ஆண்டு கால ஒருங்கிணைந்த எம்.ஏ. வரலாறு ஆகிய வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
திறமையுள்ள மாணவர்கள் எம்.டெக். வகுப்பை 5 ஆண்டு காலத்திலும், எம்.எஸ்சி., எம்.ஏ. வகுப்புகளை 4 ஆண்டு காலத்திலும் படித்து முடித்துக் கொள்ளலாம்.
மேலும், 5 ஆண்டு காலம் தொடர முடியாத மாணவர்கள் 3 ஆண்டுகளில் இளநிலைப் பட்டம் மட்டும் பெற்றுச் செல்வதற்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இதேபோல, பொது மதிப்பீட்டுப் பாடத் திட்டத்தில் (சி.பி.சி.எஸ்.) படிக்கும் மாணவர்கள் 3 ஆண்டு காலப் படிப்பை 5-வது பருவத் தேர்வுடனோ அல்லது ஓராண்டுக்கு முன்பாகவோ முடித்துக் கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மேலை நாடுகளில் கண்டுபிடிக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை சீனா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் அந்தந்த தாய் மொழிகளிலேயே மொழி பெயர்த்து இதழாக வெளியிடப்படுகிறது. இது, அங்குள்ள மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இந்தப் பணியை இப்பல்கலைக்கழகம் ஏற்றுச் செய்யவுள்ளது. மேலை நாட்டில் வெளியாகும் 'ஸ்பெக்ட்ரம்' என்ற அறிவியல், தொழில்நுட்ப இதழில் புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய கட்டுரைகள் இடம் பெறும்.
இந்த இதழை மொழி பெயர்த்து தமிழ் 'ஸ்பெக்ட்ரம்' என்ற இதழ் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணி சில மாதங்களில் தொடங்கவுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில் ரூ. 58 கோடி நிதியுதவியுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 4,000-க்கும் அதிகமான கட்டுரைகளை இந்தப் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளன. இவற்றைத் தொகுத்து அச்சடித்து வெளியிடப்படவுள்ளது.
ஆனால், இந்தக் கட்டுரைகளெல்லாம் ஆங்கிலத்தில் உள்ளன. எனவே, இவற்றையும் மொழி பெயர்த்து, 'பாரதிதாசன் அறிவியல் தொழில்நுட்ப இதழ்' வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு கட்டுரையும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இடம்பெறும்.
இந்த இதழில் பல்கலைக்கழகம், பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சார்ந்த ஆசிரியர்கள் ஆய்வு கட்டுரைகளை அளிக்கலாம். ஆனால், கட்டுரை தரமானதாக இருக்க வேண்டும்.
கிராமப்புற மாணவர்களின் மேம்பாட்டுக்காகப் பல்கலைக்கழக எல்லைக்கு உள்பட்ட 8 மாவட்டங்களிலும் தலா ஒரு ஆலோசனை மற்றும் வழிகாட்டி மையம் அமைப்பது தொடர்பாக பல்கலைக்கழக நிதிக் குழுவிடம் ஆகஸ்ட் மாதம் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு மாவட்டத்திலாவது அமைக்கப்பட்டுவிடும்' என்றார் பொன்னவைக்கோ.