நூலகங்களை தரம் உயர்த்த கோரிக்கை
திருச்சி: தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் வட்டங்களில் உள்ள நூலகங்களைத் தரம் உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இந்த ஒன்றியத்தின் நன்றி அறிவிப்பு மாநாடு திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் கு. பொன்முடி தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தலைவர் கோ. சூரியமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்தினார். தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை அலுவலர் ஒன்றியத்தின் முன்னாள் மாநிலத் தலைவர்கள் எஸ். மாரியப்பன், எஸ். கலியபெருமாள், என். பாலசுப்பிரமணியன், குப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பொது நூலகத் துறையில் ரூ.1500 வீதம் பெற்று கிராமப்புற நூலகர்களாகப் பணியாற்றும் 682 பேரை மூன்றாம் நிலை நூலகர்களாகப் பதவி உயர்வு செய்தும், காலமுறை ஊதியமும் வழங்க வேண்டும்.
இதுபோல், முழு கல்வித் தகுதியுடன் மாதம் ரூ.725 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பகுதி நேர நூலகர்களை மூன்றாம் நிலை நூலகராகப் பணியமர்த்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
மாவட்ட மைய நூலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களையும், பொது நூலக இயக்ககம் மற்றும் மாவட்ட நூலக ஆணைக் குழுக்களில் காலியாக உள்ள அமைச்சுப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.
நகராட்சி மற்றும் வட்டங்களில் செயல்படும் நூலகங்களை முதல் நிலை நூலகங்களாகவும், பேரூராட்சிப் பகுதிகளில் செயல்படும் நூலகங்களை இரண்டாம் நிலை நூலகங்களாகவும் தரம் உயர்த்தி, உரிய பணியிடங்களை அனுமதிக்க வேண்டும்.
பணிகாலத்தின் போது மரணமடைந்த பொது நூலகத் துறை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.
பல மாவட்டங்களில் நூலக ஆய்வாளர்கள், நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது போல், பொது நூலகத் துறையிலும் நல்நூலகர் விருதுடன் ரூ.5000 பணமுடிப்பு வழங்க வேண்டும்.
பொது நூலகத் துறையில் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்பகம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வரும் பகுதி நேர துப்புரவுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் துணைத் தலைவர் டி.என். செல்லத்துரை, மாவட்டத் தலைவர் கே. தாமஸ், பொது நூலகத் துறை அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் கோ. ராஜேந்திரன், செயலர் வே. கோபால்சாமி, பொருளாளர் அ. மதி உள்ளிட்ட மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக, மாநிலப் பொதுச் செயலர் பெ. செல்வராசு வரவேற்றார். மாநிலப் பொருளாளர் எம்.ஏ. பூபாலன் நன்றி கூறினார்.