அபுதாபியில் ஆடும் கூத்து
அபுதாபியில் 4வது இந்திய விருது பெற்ற திரைப்படங்களின் விழா ஏப்ரல் 7ம் தேதி தொடங்கியுள்ளது. 11ம் தேதி வரை இது நடைபெறுகிறது.
அபுதாபி கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய ஆணையமும், இந்திய தூதரகமும் இதற்கு ஏற்பாடு செய்துள்ளன.
அபுதாபியில் உள்ள கலாச்சார பவுண்டேஷன் தியேட்டர் வளாகத்தில் இந்த பட விழா நடந்து வருகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான இந்தியத் தூதர் தல்மிஸ் அகமது பட விழாவைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் டிவி.சந்திரன், கிரிஷ் காசரவள்ளி, நடிகை நவ்யா நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேற்று முதல் படமாக சேரன், நவ்யா நாயர் நடித்துள்ள ஆடும் கூத்து படம் திரையிடப்பட்டது. இன்று இந்தியில் உருவான குழந்தைகளுக்கான படமான பாஜா திரையிடப்படுகிறது.
மேலும், கன்னடத்தில் வெளியான நாயி நெரளு என்ற படமும் இன்று இரவு 8 மணிக்கு திரையிடப்படுகிறது.
நாளை மாலை 6 மணிக்கு உத்தராயன் (மராத்தி), 8 மணிக்கு மிஸ்டர் அன்ட் மிஸஸ் அய்யர் (ஆங்கிலம்) ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.
ஏப்ரல் 10ம் தேதி மாலை 6 மணிக்கு பதேர் பாஞ்சாலி (வங்காளம்), இரவு 8 மணிக்கு ஒரே கடல் (மலையாளம்) ஆகியவை திரையிடப்படுகின்றன.
ஏப்ரல் 11ம் தேதி மாலை 6 மணிக்கு சாருலதா (வங்காளம்), இரவு 8 மணிக்கு அமு (ஆங்கிலம்) ஆகியவை திரையிடப்படுகிறது.