For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

150வது ஆண்டில் தமிழக காவல் துறை: கருணாநிதி வாழ்த்து

By Staff
Google Oneindia Tamil News

Tamilnadu Police
சென்னை: தமிழக காவல்துறை தனது 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இதையொட்டி முதல்வர் கருணாநிதி தமிழக காவல்துறைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறையின் நீண்டது, நெடியது. இந்தியாவின் மிகப் பெரிய காவல்துறையில் தமிழக காவல்துறையும் ஒன்று. தேசிய அளவில் தமிழக காவல்துறை 5வது இடத்தில் உள்ளது.

டிஜிபி தலைமையில் இயங்கி வரும் தமிழக காவல்துறை, 1 லட்சத்து 30 ஆயிரத்து 58 சதுர கிலோமீட்டர் பரப்பிலான, 6.2 கோடி மக்களைக் கொண்ட தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, குற்றத் தடுப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

இதுமட்டுமல்லாது 1076 கிலோமீட்டர் கொண்ட தமிழக கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பையும் தமிழக காவல்துறை கவனித்து வருகிறது.

வடக்கு, மத்தி, மேற்கு, தெற்கு என தமிழக காவல்துறை 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலமும் ஐஜியின் தலைமையில் இயங்கி வருகிறது.

இதுதவிர சென்னை, சென்னை புறநகர், மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 7 மாநகரங்களும் ஆணையர் தலைமையில் இயங்கி வருகிறது.

தமிழகத்தில் 30 காவல் மாவட்டங்கள் உள்ளன. காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இவை இயங்கி வருகின்றன. சிவில் போலீஸ் தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயுதப் போலீஸாரும் உள்ளனர்.

மாநிலத்தில் ஒரு ரயில்வே சரகம் உள்பட மொத்தம் 12 காவல் சரகங்கள் உள்ளன. ஒவ்வொரு சரகத்திலும் 2 முதல் 3 மாவட்டங்கள் உள்ளன. சில சரகங்களில் இவை கூடுதலாக இருக்கும்.

தமிழக காவல்துறையின் பணியை எளிமையாக்கவும், சிறப்பாக்கும் வகையிலும், பல்வேறு பிரிவுகள் உருவாக்கப்பட்டு சீரிய முறையில் அவை செயல்பட்டு வருகின்றன.

அவை:

ஆயுதப் போலீஸ் அல்லது தமிழ்நாடு சிறப்புப் போலீஸ்
ஹோம் கார்ட் மற்றும் சிவில் பாதுகாப்பு
சிவில் சப்ளைஸ், சிஐடி.
கடலோர பாதுகாப்புப் படை.
சிபிசிஐடி
பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு
தமிழ்நாடு கமாண்டோ படை.
மதுவிலக்கு தடுப்புப் பிரிவு.
ரயில்வே போலீஸ்.
சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு.
சிறப்பு காவல், சிஐடி
தொழில்நுட்பப் பிரிவு

தமிழக காவல்துறையின் வரலாறு:

தமிழக காவல்துறையின் வரலாறு 1659ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. அந்த சுவாரஸ்யமான தொகுப்பு இதோ...

1659 - மதராஸ்பட்டணத்தின் (பின்னர் மெட்ராஸ் - இப்போது சென்னை) பாதுகாப்புக்காக பெத்த நாயக் என்பவரை வெள்ளையர் அரசு நியமித்தது. இதுதான் காவல் என்கிற கட்டமைப்பின் முதல் படிக்கல்.

1770 - சென்னை மாகாண ஆளுநராக இருந்த ஜோசியோஸ் டூப்ரே போலீஸ் வாரியத்தை அமைத்தார். இதன் மூலம் பொது அமைதி, பொது சுகாதாரம், ஒழுங்கு பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

1771 - சந்தைகளில் பொருட்கள் முறையாக விற்கப்படுகிறதா, மோசடிகள் நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க ஆளுநர் ஸ்ட்ரேட்டன் கொத்வால் என்கிற கண்காணிப்பாளர்களை நியமித்தார்.

1780 - காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) பதவி உருவாக்கப்பட்டது. மார்க்கெட்களை கண்காணித்து, பொருட்களின் விலை நிலவரத்தை கட்டுப்படுத்த இந்தப் பதவி உருவாக்கப்பட்டது.

1782 - தவறுகளைத் தடுக்கவும், மோசடிகளை தடுக்கவும், சுகாதாரத்தை முறைப்படுத்தவும் முறையான காவல்துறையை உருவாக்குவது குறித்த விரிவான திட்டத்ைத போஃபாம் என்பவர் உருவாக்கினார்.

1791 - கொத்வால் போலீஸ் முறை ஒழிக்கப்பட்டது. வியாபாரிகளிடம் இவர்கள் முறைகேடாக பணம் (லஞ்சம்) வாங்குவதாக புகார்களின் பேரில் இந்தப் பதவி ஒழிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக பாலிகர் என்ற பதவி முறை அமல்படுத்தப்பட்டது.

1806 - 3 போலீஸ் மாஜிஸ்திரேட்டுகளுடன் முதலாவது எஸ்.பி.யாக வால்டர் கிரான்ட் பதவிேயற்றார்.

1815 - மெட்ராஸ் எஸ்.பியாக பதவியேற்ற தாமஸ் ஹாரிஸ் மெட்ராஸை எட்டு பகுதிகளாகப் பிரித்து காவல் பணியை தொடங்கினார்.

1829 - 1832 - மெட்ராஸ் சிட்டி அட்வகேட் ஜெனரல் ஜார்ஜ் நார்ட்டனின் பரிந்துரையின் பேரில் பிளாக் டவுன் மாவட்டம், திருவல்லிக்கேணி மாவட்டம், வேப்பேரி மாவட்டம், செயின்ட் தாமஸ் மாவட்டம் (சாந்தோம்) என மெட்ராஸ் நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

1834 - முதல் இந்திய போலீஸ் மாஜிஸ்திரேட்டாக பிரான்சிஸ் கெல்லியும், டி.எஸ்.பியாக வேம்பாக்கம் ராகவாச்சாரியார் பொறுப்பேற்றனர்.

1856 - போலீஸ் சட்டம் 12 திருத்தப்பட்டது. அதன் படி மெட்ராஸ் சிட்டியின் முதல் காவல் ஆணையராக ஜே.சி. போட்லர்சன் நியமிக்கப்பட்டார்.

1858 - ராபின்சன் தலைமை போலீஸ் ஆணையராக (ஐஜி) நியமிக்கப்பட்டார்.

1859 - நவீன மெட்ராஸ் காவல்துறையின் தொடக்கம் இங்குதான் ஆரம்பித்தது. போலீஸ் சட்டம் 24 கொண்டு வரப்பட்டது. 1906ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போலீஸ் ஆணையத்திற்கு இதுதான் முன்னோடியாகும்.

1865 - தற்போதைய போலீஸ் (டிஜிபி) தலைமையிடம் அமைந்துள்ள கட்டடம் மாதம் 90 ரூபாய்க்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டது.

1874 - இந்தக் கட்டடத்தை மெட்ராஸ் மாகாண காவல்துறை ரூ. 20 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கியது. மேலும் ரூ. 10 ஆயிரம் செலவழித்து பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

1884 - மலப்புரம் பகுதியில் (கேரளா) மாப்பிள்ளை வகுப்பினரால் அடிக்கடி கலவரம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து அங்கு மலப்புரம் சிறப்பு போலீஸ் படை உருவாக்கப்பட்டது.

1895 - கை விரல் ரேகைப் பிரிவு தொடங்கப்பட்டது.

1902 - மெட்ராஸ் நகரம் 2 சரகங்களாகப் பிரிக்கப்பட்டது. வடக்கு சரகம் துணை ஆணையர் தலைமையிலும், தென் சரகம் ஆணையரின் நேரடிக் கண்காணிப்பிலும் விடப்பட்டன.

1906 - குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடங்கப்பட்டது. பாவ்செட் புதிய டிஐஜியாக நியமிக்கப்பட்டார்.

1909 - கிங்க்ஸ் போலீஸ் பதக்கம் உருவாக்கப்பட்டது.

1919 - மெட்ராஸ் கமிஷனராக திவான் பகதூர் பராங்குசம் நாயுடு நியமிக்கப்பட்டார். இப்பதவிக்கு வந்த முதல் இந்தியர் இவர்தான். பி.பி. தாமஸ் ஐஜியாக நியமிக்கப்பட்டார்.

1928 - சிஐடி போலீஸ் பிரிவு சிறப்பு பிரிவு (எஸ்.பி.சிஐடி) மற்றும் குற்றப் பிரிவு (சிபிசிஐடி) என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

1929 - மெட்ராஸ் சிட்டி போலீஸில் குற்றப் பிரிவு, சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவாக பிரித்து அமைக்கப்பட்டது.

1935 - பொதுமக்கள் ஒத்துழைப்பை பெறும் வகையில் கிராம கண்காணிப்பு கமிட்டிகள் அமைக்கப்பட்டன.

1946 - போலீஸ் வயர்லஸ் பிரிவு தொடங்கப்பட்டது.

1947 - சென்னையைச் சேர்ந்த அதிகாரி சஞ்சீவி, டெல்லி ஐபியின் இயக்குநராக பொறுப்பேற்றார். இப்பதவியில் அமர்ந்த முதலாவது இந்தியர் இவர்தான்.

1951 - மெட்ராஸ் மோப்ப நாய்ப் படை உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர் மோப்ப நாய்ப் படைகள் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் மிகவும் திறமையான மாநிலமாக தமிழகம் விளங்க இந்தப் படைதான் முன்னோடியாக அமைந்தது.

1956 - போலீஸ் ரேடியோ அலுவலகம் உருவாக்கப்பட்டது.

1959 - தமிழக காவல்துறை நூற்றாண்டு விழா கண்டது.

1960 - போலீஸ் ஆய்வு மையம் உருவாக்கப்பட்டது.

1961 - மதுரையில் மோப்ப நாய் பிரிவு உருவாக்கப்பட்டது.

- மாநில தடயவியல் ஆய்வகத்திற்கு அரசு அனுமதி அளித்தது.

1963 - மெட்ராஸ் போலீஸ் மருத்துவமனை முழு அளவிலான மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.

- ஹோம் கார்ட் எனப்படும் ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது.

1971 - போலீஸ் கம்ப்யூட்டர் பிரிவு உருவாக்கப்பட்டது. காவல்துறையில் கம்ப்யூட்டர்மயமாக்கலை தொடங்கிய முதல் மாநிலம் தமிழகம்தான்.

- கோபாலசாமி அய்யங்கார் தலைமையில் தமிழ்நாடு போலீஸ் கமிஷன் உருவாக்கப்பட்டது.

- தீவிரவாதிகளை ஒடுக்க சிறப்பு சிஐடி பிரிவு உருவாக்கப்பட்டது. இதுவே பின்னர் கியூ பிரிவாக உருவெடுத்தது.

1973 - தமிழக காவல்துறையில் முதன் முதலாக பெண் காவலர்களும், பெண் சப் இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டனர்.

1976 - ஆவடியில் போலீஸ் போக்குவரத்து பணிமனை, பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது.

- சிஐடி பிரிவில் பாதுகாப்புப் பிரிவு தொடங்கப்பட்டது.

1979 - தமிழக காவல்துறையின் தலைவர் பதவியாக டிஜிபி பதவி உருவாக்கப்பட்டது.

- தமிழக காவல்துறையின் முதலாவது டிஜிபியாக ஸ்ட்ரேஸி நியமிக்கப்பட்டார்.

1981 - தமிழ்நாடு காவல் வீட்டு வசதி வாரியம் உருவாக்கப்பட்டது.

1984 - சிஐடி வனப் பிரிவு உருவாக்கப்பட்டது.

1989 - தமிழ்நாடு காவல் வீட்டு வசதி கழகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துடன் இணைக்கப்பட்டது.

- காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது.

1991 - காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறையினரை தேர்வு செய்வதற்காக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உருவாக்கப்பட்டது.

- தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் தனியாக செயல்படத் தொடங்கியது.

1992 - சிறப்பு பாதுகாப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது.

- தமிழகத்தின் முதலாவது அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்னை ஆயிரம் விளக்கில் தொடங்கப்பட்டது. படிப்படியாக மாநிலம் முழுவதிலும் இது விரிவுபடுத்தப்பட்டது.

1993 - சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது.

1994 - கடலோரக் காவல் படைப் பிரிவு உருவாக்கப்பட்டது.

1997 - மதக் கலவரங்களைத் தடுக்க விரைவு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது.

2001 - புதிய நூற்றாண்டில், தமிழக காவல்துறை 91,331 போலீஸார், 11 சரகங்கள், 30 போலீஸ் மாவட்டங்ள், 2 ரயில்வே மாவட்டங்கள், 6 ஆணையரகங்கள், 189 துணை கோட்டங்கள், 287 சர்க்கிள்கள், 1276 காவல் நிலையங்களுடன் விஸ்வரூபம் எடுத்து நின்றது.

2002 - காவலர் குறை தீர்ப்பு தினம் தொடங்கப்பட்டது.

- சென்னை, மதுரை, கோவை, திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஐஜி தலைமையில் புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டன.

2003 - நெடுஞ்சாலைகளில் விபத்துக்களைக் குறைக்க ஒரு நடமாடும் காவல் நிலையம், 80 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் தொடங்கப்பட்டன.

- 177 போலீஸ் கிளப்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டது.

2004 - பெண் போலீஸாரைக் கொண்ட தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் பட்டாலியன் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே இதுதான் அனைத்து மகளிர் போலீஸ் பட்டாலியன் ஆகும்.

- சந்தனக் கடத்தல் வீரப்பனை கொன்று தமிழக காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை பெரும் சாதனை படைத்தது.

2005 - செங்கை கிழக்கு காவல் மாவட்டம், சென்னை மாநகர காவல்துறையுடன் இணைக்கப்பட்டது.

2006 - ஆசியாவிலேயே மிகப் பெரியதும், நவீனமானதுமான புழல் மத்திய சிறை திறக்கப்பட்டது.

2007 - சென்னை காவல்துறை 150 ஆண்டுகளைத் தொட்டது.

முதல்வர் கருணாநிதி வாழ்த்து:

தமிழக காவல்துறையின் 150வது ஆண்டையொட்டி முதல்வர் கருணாநிதி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

தமிழக காவல் துறை 150வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். சிறப்பு மிக்க வரலாற்றிற்கும், பாரம்பரியத்திற்கும் சொந்தமான தமிழக காவல் துறை தனது சீரிய மக்கள் பணியிலும், திறமையிலும் உளக காவல்துறை வரிசையில் உயரிய இடத்தை பெற்று வந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

சட்டத்தை மதிப்போர்க்கு இன்முகம் காட்டியும், மீறுவோரை இரும்பு கரம் கொண்டு அடக்கியும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளது தமிழக காவல் துறை. அமைதியையும், சட்டம் ஒழுங்கையும் பராமரிப்பதையே குறிக்கோளாக கொண்டு தமிழகம் தொழில்புரட்சியில் முதலிடத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது. இந்த வேளையில் அரசுக்கு உறுதுணையாக, பொதுமக்களின் நண்பனாக, பாதுகாவலாக தியாக மனப்பான்மையுடன் காவல் துறை செயல்பட்டு வருகிறது.

அண்ணா அறிவித்த கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் மேலும் பல வெற்றிகளை குவிக்க என்னுடைய உளமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X