வேடந்தாங்கல்..வந்தனர் விருந்தினர்கள்

சென்னையில் இருந்து சுமார் 80 கிமீ தூரத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இங்குள்ள 75 ஏக்கர் ஏரிக்கு ஆண்டுதோறும் இலங்கை, ரஷ்யா, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து பல வகையான பறவைகள் வருவது வழக்கம்.
அக்டோபர் முதல் மார்ச்மாதம் வரையிலான சீசனில் ஆயிரக்கணக்கில் பறவைகள் இங்கு வந்து முகாமிட்டு, முட்டையிட்டு, குஞ்சு பொறிக்கும். இதனால் இந்த ஏரியில் எந்தப் பக்கம் திரும்பினாலும் பறவைகளாகத் தான் காட்சியளிக்கும்.
வட கிழக்குப் பருவ மழை தொடங்கி ஏரியில் நீர் நிறைந்தபின் பறவைகள் வரத் தொடங்கும். டிசம்பர் மாதம் தான் சீசன் களைகட்டும்.
இந் நிலையில் இந்த ஆண்டு இப்போதே 15,000 பறவைகள் வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதில் கூழைக்கடா, வெள்ளை அரிவாள் மூக்கன், பாம்புதாரா, நத்தை குத்தி நாரை, சாம்பல் நாரை, ஊசிவாயன் வாத்து, சிரவி, புள்ளிவாத்து, மரத்தாரா, பெரிய கொக்கு, நீர்க்காகம் உள்பட 24 வகை பறவைகள் அடக்கம்.
பறவைகளைப் பார்க்க பார்வையாளர்களும் குவிய ஆரம்பித்துவிட்டனர். வழக்கமாக நவம்பர் 3வது வாரத்தில் தான் இந்த சரணாலயம் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு இப்போதே பறவைகள் அதிகம் அளவில் வந்துவிட்டதால் நவம்பர் முதல் வாரத்திலேயே சரணாலயம் திறக்கப்படும் என்று தெரிகிறது.
இங்குள்ள ஏரியில் பாதி மூழ்கிய மரங்களின் கிளைகளில் கூடுகளைக் கட்டி இந்தப் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். படகில் சென்றபடி மரங்களின் மிக அருகில் நின்று பறவைகளை, கூடுகளைக் காணலாம்.












Click it and Unblock the Notifications