ஆண்டுகள் நூறு- தாக்குதல் 3- இன்னும் வலுவுடன் தாஜ்!
மும்பை: நாறாண்டுகளைத் தாண்டியும் இந்தியாவின் பெருமை மிகு அடையாளமாக திகழும் தாஜ் மஹால் ஹோட்டல், இதுவரை 3 முறை தீவிரவாதிகளுக்கு இலக்காகியுள்ளது. இருந்தும் அதன் எழிலும், பொலிவும் சற்றும் மங்காமல் மேலும் சுடர் விட்டு வருகிறது.
தாஜ்மஹால் ஹோட்டல் டாடா குழுமத்திற்குச் சொந்தமானது. ரத்தன் டாடாவின் தாத்தாவான ஜாம்ஷெட்ஜி டாடா தான் இதைக் கட்டினார்.
இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பைக்கு (அப்போது பாம்பே) நிச்சயம் மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டல் தேவை என்று கருதிய ஜாம்ஷெட்ஜி, கட்டிய கனவு ஹோட்டல்தான் இது.
இதற்கு இன்னொரு பின்னணியும் உண்டு. வெளிநாடு ஒன்றுக்குப் போனபோது ஜாம்ஷெட்ஜி அங்குள்ள நட்சத்திர ஹோட்டலுக்குத் தங்கப் போனார். ஆனால் அவரை உள்ளே விட மறுத்த ஹோட்டல் நிர்வாகம், வெள்ளையர்கள் மட்டுமே இங்கு தங்க முடியும் என கூறி அனுப்பியது.
இதனால் வெகுண்ட ஜாம்ஷெட்ஜி, இதேபோன்ற, இதை விட பிரமாண்டமான ஹோட்டலை இந்தியாவில் கட்டுகிறேன் என்று சவால் விட்டு விட்டு வந்தார். அப்படிப் பிறந்ததுதான் தாஜ் பேலஸ் ஹோட்டல்.
சொன்னது போலவே இந்த ஹோட்டலைக் கட்டினார். 1903ம் ஆண்டு இந்த ஹோட்டல் திறக்கப்பட்டது.
இங்கு பல்வேறு மாகாண மகாராஜாக்கள், இளவரசர்கள், பல்வேறு நாட்டு மன்னர்கள், அதிபர்கள், முக்கியப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள் என பெரும் பெரும் தலைகள் தங்கிச் சென்றுள்ளனர்.
100 ஆண்டுகளையும் தாண்டி இன்றும் மும்பையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது தாஜ்.
1970ம் ஆண்டு தற்போதுள்ள டவர் பிளாக் பகுதி கட்டப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த மெல்டன் பெக்கர் என்ற கட்டடக் கலை வல்லுனர் இதை வடிவமைத்தார்.
இப்படிப்பட்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட தாஜ் ஹோட்டல் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காவது முதல் முறையல்ல. மாறாக 3வது முறையாகும்.
முன்பு மும்பை தொடர் குண்டுவெடிப்பின்போது ஒருமுறையும், பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறையும் தாஜ் ஹோட்டல் தீவிரவாதிகளுக்கு இலக்கானது.
ஆனால் இப்போது நடந்துள்ள தாக்குதலே மிகப் பெரியதாகும். இதில் ஹோட்டலுக்கு மாபெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
பின்புறம் உள்ள ஸ்விம்ங் பூலில் தான் தீவிரவாதிகள் மாபெரும் பேயாட்டம் ஆடியுள்ளனர். அங்கு எங்கு பார்த்தாலும் உடல்களாகவே சிதறிக் கிடக்கின்றன.
மேலும் தீவிரவாதிகள் வெடித்த கிரனைடுகளால் ஹோட்டலின் பல்வேறு அறைகளும், அதன் மத்திய பகுதியிலும் தீப் பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன. இதை சரி செய்ய பல கோடிகள் செலவாகலாம்.