உடல் ஊனமுற்றோரும், மெய்ப்புலம் அறை கூவலரும்!
சென்னை விமான நிலையத்தில் உடல் ஊனமுற்றோர்களுக்காகவே சிறப்பு கழிப்பறை ஒன்று உள்ளது. அதன் வெளிக் கதவின் மேல் வைக்கப்பட்டுள்ள பலகையில், மெய்ப்புலம் அறைகூவலர் என்று எழுதி வைத்துள்ளனர்.
இதைக் காணும் பலருக்கும் இதன் அர்த்தம் சுத்தமாக புரியாமல் குழம்பியபடியே உள்ளே சென்று திரும்புகின்றனர்.
மெய்ப்புலம் அறைகூவலர் என்றால் உடல் ஊனமுற்றோர் என்று பொருளாம்.
பிசிகலி சேலஞ்ச்ட் என்று எழுதாமல் தமிழில் எழுத வேண்டியதுதான். உடல் ஊனமுற்றோர் என்றே எழுதி வைக்கலாம். அதை விடுத்து வள்ளுவர், கம்பர் போன்ற தமிழ்ப் புலவர்களுக்கு மட்டுமே புரியும் வகையிலான படு சுத்தத் தமிழில் எழுதி வைத்தால் யாருக்காவது புரியுமா?
நல்ல வேளையாக மெய்ப்புலம் அறைகூவலர் என்ற வார்த்தைக்கு அருகில் உடல் ஊனமுற்றோருக்கான படத்தைப் போட்டு வைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் இது ஏதோ தமிழ் சங்கத்தின் அலுவலகம் என்று நினைத்து யாரும் இப்பக்கமே வராமல் திரும்பிப் போகக் கூடும்.
தமிழ்ப்படுத்த வேண்டியதுதான், அதற்காக இப்படியெல்லாமா 'படுத்துவது'?