சானூரில் திறந்தவெளி தொல்பொருள் கண்காட்சி மையம்

திருச்சி: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சானூரில் திறந்த வெளி தொல்பொருள் கண்காட்சி மையத்தை அமைக்க இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் (Archeological survey of India) தீர்மானித்துள்ளது.
திருச்சியில் இதுகுறித்து தொல்பொருள் ஆய்வுக் கழக கண்காணிப்பாளர் சத்யபாமா பத்ரிநாத் கூறுகையில்,
சானூர் 1,500 ஆண்டு வரலாறு கொண்ட பழமையான இடமாகும். இங்கு நாட்டிலேயே முதல் முறையாக திறந்தவெளி தொல்பொருள் கண்காட்சி மையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இங்குள்ள 35 முதல் 40 ஏக்கர் வரையிலான பரப்பளவில் இந்த மையம் அமையவுள்ளது. இங்கு பழங்கால வாழ்க்கை முறைகள் காட்சியாக வைக்கப்படும். மேலும், தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழ்வாய்வுப் பணிகள் குறித்த விளக்க காட்சியும் இடம் பெறும்.
அடுத்த ஆண்டு இப்பணிகள் தொடங்கும். தமிழகத்தில் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள பழங்கால தாழிகள், பிற கலைப் பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்படும்.
போபாலில் உள்ள லிவிங் மியூசியத்திலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும்.
நெல்லை மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தற்போது அகழ்வாய்ப்பு பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. அங்கு 3 அடி உயரம் உடைய தாழிகள், தாமிர கலைப் பொருட்கள் மற்றும் மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மாமல்லபுரம் அருகே உள்ள சலுவன்குப்பம் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளோம். அங்கு புதிதாக அகழ்வாய்வுப் பணிகள் நடைபெறவுள்ளன. இங்கு முற்றிலும் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தமிழகத்திலேயே இதுதான் முதல் முறையாகும்.
இந்தக் கோவில் தவிர டெரகோட்டா நந்தி சிலைகளும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன. அடுத்த ஆண்டு இங்கு தொடர் அகழ்வாய்வுப் பணிகள் நடைபெறும்.
இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் ஹைதராபாத் மையத்தில் வைத்து கார்பன்-14 சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் ராமன் சோதனை முடிவுகளும் நடத்தப்பட்டுள்ளன. அதன் முடிவுகளை எதிர்பார்த்துள்ளோம். அதன் பிறகே இந்த பொருட்களும், கோவிலும் எந்தக் கால கட்டத்தைச் சேர்ந்தவை என்பது உறுதியாகத் தெரிய வரும்.
இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ள ஆயிரம் கால் மண்டபம் மற்றும் திருமயம் கோட்டை ஆகியவற்றை பராமரிக்கும் பணியையும் தொல்பொருள் ஆய்வுக் கழகம் மேற்கொள்ளவுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோவிலை பாதுகாக்கும் பணியையும் தொல்பொருள் ஆய்வுக் கழகம் மேற்கொள்ளவுள்ளது. இங்குள்ள சிவன் கோவில் மிகவும் பழமையானது. சோழர் காலம் முதல் விஜயநகர சாம்ராஜ்யம் வரையிலான காலகட்டத்தில் இந்தக் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது.
தஞ்சை, தாராசுரம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள 3 சோழர் கால கோவில்களை மராமத்து செய்யும் பணியும் முடிவடையும் நிலையில் உள்ளது.
கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள கோவில் பிரகார சுவர்களை மறு சீரமைக்குப் பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது.
தஞ்சை பெரிய கோவில் மற்றும் தாராசுரத்தில் உள்ள வடக்கு மண்டபத்தை சீரமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் தலா ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications