இலங்கையில் கடும் சண்டை: விடுதலைப் புலிகள் உட்பட 33 பேர் பலி
கொழும்பு: இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையே நடந்த கடும் சண்டையில் 15 விடுதலைப்புலிகள் உட்பட 33 பேர் பலியாகினர்.
இரு தரப்பினருக்கிடையை நடந்த சண்டையில் 33 பேர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறுகிறது.
இதுகுறித்து அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
யாழ்பாணம் மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் இரு தரப்பினருக்கிடையே நிகழ்ந்த சண்டையில் 15 விடுதலைப் புலிகள் உட்பட 30 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து விட்டனர்.
இந்த சண்டையில் நாகர்கோவில் பகுதியில் 4 பதுங்கு குழிகளும், முகமலை பகுதியில் 12 பதுங்கு குழிகளும், கிலாலியில் 8 பதுங்கு குழிகளையும் அழித்ததாக ராணுவத் தரப்பு கூறுகிறது.
மேலும், இந்த சண்டையில் ராணுவத் தரப்பில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 9 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இதே போல் நேற்று வன்னிப் பகுதியில் நடந்த சண்டையில் 16 புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
ஆனால் புலிகள் தரப்பு இணையத் தளத்தில் கூறியுள்ளதாவது,
யாழ்பாணம், வன்னி பகுதிகளில் நடந்த சண்டையில் அரசு தரப்பு படைகள் விடுதலைப் புலிகளின் தாக்குதலை சமாளிக்கமுடியாமல் பின்வாங்கி ஓடிவிட்டனர்.
மன்னார் பகுதியின் பலைக்குழி என்ற இடத்தில் நேற்று நடந்த சண்டையில் 10 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 25க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.