இலவச பஸ் பாஸ் கோரும் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
திருக்கோவிலூர்: எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு அரசு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தமிழ் எழுத்தாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட கிளையின் அமைப்புக் கூட்டம் திருக்கோவிலூரை அடுத்த மணம்பூண்டியில் உள்ள பாரதி இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ப.மதிவாணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் பாரதி சுகுமாறன், மாநில பொதுச் செயலாளர் கோவி.ஆறுமுகம், விக்கிரமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழ் எழுத்தாளர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.
எழுத்தாளர்கள், கவிஞர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு அரசு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.
தமிழக அரசு சார்பில் இலவச குடியிருப்புகள் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் எழுத்தாளர்கள், கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் திறமைமிக்க எழுத்தாளர்களை தேர்வு செய்து செந்தமிழ்செம்மல், முத்தமிழ்ச் செம்மல், எழுத்துவேந்தர், இலக்கியவேந்தர், கவிமாமணி, கவிப்பேரொளி, கவிஞாயிறு, பைந்தமிழ்பரிதி ஆகிய துறை சார்ந்த விருதுகளை வழங்குவது என்றும் தீர்மானக்கப்பட்டது.
நிர்வாகிகள் தேர்வு:
கூட்டத்தில் மலரடியான் மாவட்ட தலைவராகவும், மதிவாணன், பாரதிமணியன் ஆகியோர் துணைத் தலைவர் களாகவும், சுந்தரவடிவேல் செயலாளராகவும், ஜெயக்குமார், தமிழினியன் ஆகியோர் துணை செயலாளர்களாகவும், நன்மொழி பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில செயற்குழு உறுப்பினர்களாக நல்லாசிரியர் கணேசன், தமிழ்ச்சுடர், வல்லபராஜ், ரவிச் சந்திரன், கோதண்டபாணி, சிவக்குமார், பிச்சைப்பிள்ளை, ரமேஷ், பாக்கியராஜ், மோகன் தாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.