காந்தி கடிகாரம், கண்ணாடியை ஒப்படைக்க தயார்: ஓடிஸ்
டெல்லி: தேசதந்தை மகாத்மா காந்தியின் மூக்குக் கண்ணாடி, பாக்கெட் கடிகாரம் மற்றும் சந்தன மிதியடி போன்றவற்றை நியூயார்க்கில் ஏலம் விடப்போவதாக அறிவித்திருந்த ஜேம்ஸ் ஓடிஸ் என்ற அமெரிக்கர் திடீரென மனம் மாறி, அதை இந்திய அரசிடம் கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி கடந்த 1930ம் ஆண்டு தனது கண்ணாடி ஒன்றை அப்போதைய இந்திய ராணுவத்தில் பணியாற்றிய ஸ்ரீ திவான் நவாப் என்பவரிடம் கொடுத்தார். கண்ணாடி, பாக்கெட் கடிகாரம் மற்றும் அவரது சந்தன மிதியடி இவை அனைத்தும் தற்போது காந்தியின் நினைவு பொருட்களை சேகரித்து வைத்திருக்கும் ஜேம்ஸ் ஓடிஸ் என்ற அமெரிக்கர் வசம் உள்ளது.
சமீபத்தில் அவர் காந்தியின் நினைவு பொருட்களை நியூயார்க்கில் இம்மாதம் ஏலம் விடப்போவதாக அறிவித்தார். இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அவருக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் திடீரென மனம் மாறிய அவர் இந்திய அரசின் வேண்டுகோளை அடு்த்து இந்தியாவிடம் கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
காந்தியின் கொள்கைகளுக்கு இன்று தேவைப்படும் முக்கியத்துவத்தை அடுத்து அவரது பொருட்களை ஏலம் விட முடிவு செய்தேன். இதன்மூலம் அவரது பொருட்களை வெளி உலகம் அறிந்து கொள்வதற்கு முயற்சி செய்தேன்.
அதை வாங்கும் நபர் அதை நடமாடும் கண்காட்சியாக வைத்து உலகம் முழுவதும் கொண்டு செல்வார். அதன்மூலம் காந்தியின் பெருமை மற்றும் கொள்கை உலகம் முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் பரவும் என நினைத்தேன். இது தொடர்பாக இந்திய அரசு என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினால், இப்பொருட்களை திருப்பி கொடுப்பேன் என்றார்.
ஓடிஸின் மனமாற்றத்தால் காந்தியின் இந்த அரிய பொருட்கள் ஏலம் போகாமல் தப்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications