ராஜபக்சே 'நாசமாக' கோவிலில் வேண்டுதல்!
- முனைவர் மு. இளங்கோவன்
நான் நாட்டுப்புறவியல் துறையில் ஆய்வு செய்தவன்.இரண்டு நூல்களும் பல கட்டுரைகளும் நாட்டுப்புறவியல் சார்ந்து எழுதியுள்ளேன். பல கல்வி நிறுவனங்களில் நாட்டுப்புறப் பாடல்கள், பழக்கவழக்கங்கள் குறித்து உரையாற்றியுள்ளேன். சிங்கப்பூர்,மலேசியா சென்ற பொழுதே நான் நாட்டுப்புறவியல் சார்ந்துதான் பேசினேன். பாடினேன். பல்வேறு பயிலரங்குகளில் கலந்துகொண்டு பயிற்சிபெற்றுள்ளேன்.பல்லாயிரம் மாணவர்களுக்கு நாட்டுப்புறவியல் பற்றி பாடம் சுவைபட நடத்தியுள்ளேன்.
ஏன்? ஒற்றைவரியில் இப்படி சொல்லலாம். நான் முனைவர் பட்ட ஆய்வு நாட்டுப்புறவியலில் செய்துள்ளேன் என இன்றுவரை பல நண்பர்கள் நினைத்துள்ளனர்(கவிதைகள் பற்றி ஆய்வு செய்தேன்). அந்த அளவு அந்தத் துறை எனக்கு ஈடுபாடான துறை.
அதில் நாட்டுப்புற நம்பிக்கைகள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டமே பலர் பெற்றுள்ளனர். நாம் நினைக்கும் செயல்கள் நடைபெற இறைவனிடம் மன்றாடுவது உண்டு. நேர்த்திக்கடன் செய்வது உண்டு. அதில் ஒன்றுதான் சீட்டு எழுதிக்கட்டுவது.
நம் பொருள் காணாமல் போனாலோ,நமக்கு அளவுக்கு அதிகமான தொல்லையை, கொடுமையைப் பிறர் கொடுத்தாலோ கையற்றவர்கள்,திக்கற்றவர்கள் தெய்வத்திடம் முறையிடுவர். இதன் பொருட்டு சீட்டு எழுதிக்கட்டுவது உண்டு. அவ்வகையில் விருத்தாசலம் அருகில் உள்ள வேடப்பர் கோயிலில் சீட்டெழுதிக் கட்டுவது, ரெட்டித்தெரு காளியம்மன் கோயிலில் கொலைச்சேவல் குத்துவது வழக்கம்.
இவ்வாறு செய்தால் தீங்கு செய்தவர்களின் குலம், உடந்தையாக இருந்தவர்களின் குடும்பம், துணைபோனவர்களின் குலம்,கண்டும் காணாமல் இருந்தவர்களின் குடி,கோத்திரம் நாசமாகப் போகும் என்பது தமிழகத்தில் உள்ள மக்களின் நம்பிக்கை.
ஈழப்போர் உச்சகட்டத்தில் உள்ள இந்தச்சூழலில் அமைதி வேண்டிப் பலரிடம் முறையிட்டும் நடக்காத சில தமிழ்ப்படைப்பாளிகள் தங்கள் தெய்வத்திடம் சீட்டு எழுதிக் கட்டியுள்ளதாகப் பதிவு ஒன்று காண நேர்ந்தது.
உலகெங்கும் உள்ள நாட்டுப்புறவியல் ஆய்வாளர்களுக்குப் (Folklore Research scholar)பயன்படும் என்ற நோக்கில் அந்தத் தகவலை மறுபதிப்பு செய்கிறேன்.தேவையானவர்கள் தாய்த் தலத்திற்குச்சென்றும் கண்டு அறியலாம்.
"அருள்மிகு வேட்ப்பர் துணை"
ராசபக்சேவுக்கு சாமிதான் தண்டனை கொடுக்கவேண்டும்.
கொலைகாரன் ராசபக்சேவுக்கு தண்டனை வேண்டி வேடப்பர் கோயிலில் சீட்டு எழுதிகட்டிய படைப்பளிகள்.
நாட்டுப்புற மக்கள் தங்களுக்கு நேரும் துன்பங்களைக் கேட்பாரற்ற போது தங்களின் குல தெய்வத்திடம் சீட்டு எழுதிக்கட்டுவது மரபு.அவர்களுக்குத் துன்பம் செய்தவர்களை தெய்வம் தண்டிக்கும் என்பது அந்த மக்களின் நம்பிக்கை.
அந்த நம்பிக்கையைப் பின்பற்றி தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கும் கொலைகார ராசபக்சேவுக்கும், சரத்பொன்சேகாவுக்கும் தக்க தண்டனை கொடுக்க வேண்டி வேடப்பர் கோயிலில் தமிழ்ப் படைப்பளிகள் பேரியக்க கடலூர் மாவட்ட நிர்வாகிகள் சீட்டு எழுதி கட்டியுள்ளனர்.
அதன் விவரம் பின் வருமாறு.
2009 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15ஆம் நாள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் அருள்மிகு வேடப்பரைக் குலதெய்வமாகக் கொண்ட மக்களின் சார்பில் நாங்கள், தாங்களுக்கு நாளது தேதியில் எழுதிக்கொள்ளும் பிராது.
எங்களின் தமிழின உறவுகளாகிய அப்பாவி ஈழத்தமிழ் மக்களை நச்சுக்குண்டு வீசி கொன்று குவித்து வரும் ராசபக்சேவையும் சரத் பொன்சேகாவையும் மாறு கால் மாறு கை வாங்கி தண்டனை கொடுக்குமாறு வேண்டி இச்சீட்டினைத் தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்.
இது எங்களின் கடைசி நம்பிக்கை, ஏனென்றால் நாங்கள் யார் யாரையோ நம்பினோம் அவர்கள் எல்லோரும் எங்களை கைவிட்ட நிலையில் தங்களை மட்டுமே ஈழத்தமிழ் மக்களைக் காக்கும் கடைசி ஆதாரமாக நாங்கள் நம்புகிறோம். எஙள் நம்பிக்கை வீண் போகாமல் கொலைகார ராசபக்சேவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் தக்க தண்டனை கொடுத்து அப்பாவி ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றுமாறு தங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம். இதற்கு படிக்கட்டணமாக ரூ.10 செலுத்தி விடுகிறோம்.
தண்டனையைத் தாங்கள் உறுதியாக நிறைவேற்றும் நிலையில் உடன் நாங்கள் அதற்கு பரிகாரமாக படிக்கட்டணம் மற்றும் சிறப்பு கொடுத்து பிராதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
தங்களைக் குலதெய்வமாகக் கொண்ட மக்களின் சார்பில்
கடலூர் மாவட்ட தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்க நிர்வாகிகள்.
கோ.தெய்வசிகாமணி
இரத்தின புகழேந்தி,
கோவிந்தன்,
கண்மணிகுணசேகரன்,
சி.சுந்தரபாண்டியன்,
அன்பாதவன்,
ஆறு.இளங்கோவன்,
மா.துரைராசு,
இராம.அசோகன்,
புதூர் சாமி,
சீவா செந்தில்,
தங்க.வெங்கடேசன்,
அரங்க.வேணுநாதன்,
சிவராமகிருட்டிணன்,
கு.தமிழாகரன்,
பூமாலை மணிவண்ணன்,
காமராசு,
திருமாறன்,
செம்புலிங்கம்,
செகணாதன்.
காண்க
தட்ஸ்தமிழ் நன்றி - http://muelangovan.blogspot.com/