யுஏஇ தமிழ்ச் சங்க ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சி
துபாயில் யுஏஇ தமிழ்ச் சங்கம் ஜோடிப்பொருத்தம், பேன்ஸி டிரஸ் போட்டி, வினோத விளையாட்டு மற்றும் சிறப்புச் சொற்பொழிவு ஆகிய நிகழ்வுகள் 23.04.2009 வியாழக்கிழமை கராமா சென்டரில் நடைபெற்றன.நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட அரசு டவுண் காஜி மவ்லவி காரி கே. ஜலீல் சுல்தான், இசையருவி குமரி அபுபக்கர், கவிஞர் எம்.ஏ. சாகுல் ஹமீது உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
மவ்லவி ஜலீல் சுல்தான் ஆதி மனிதன் பேசிய மொழி தமிழ் என தமிழ் மொழியின் பெருமைகளைக் குறிப்பிட்டார். அமீரகத்தில் தமிழர்களை ஒருங்கிணைத்து பணியாற்றிவரும் யுஎஇ தமிழ்ச் சங்கத்தின் பணிகளைப் பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான பேன்ஸி டிரஸ் போட்டி, ஜோடிப்பொருத்தம் நிகழ்ச்சி, சங்கமம் தொலைக்காட்சி ஆதரவுடன் வினோத விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
பேன்ஸி டிரஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுடர்வம்சம் அமைப்பின் ரகுராஜ்,அமீரக தமிழ்க் கவிஞர்கள் பேரவை தலைவர் கவிஞர் அப்துல் கத்தீம், சமூக ஆர்வலர் அஷ்ரஃப் அலி உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர். ஜோடிப்பொருத்தம் நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கு குமரி அபுபக்கர் பரிசுகளை வழங்கினர்.
சங்கமம் தொலைக்காட்சி இயக்குநர் கலையன்பனுக்கு யுஏஇ தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தங்கப்பதக்கம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரக தேசியக்கொடியை சுமார் இரண்டு இலட்சம் மணிகளால் வடிவமைத்த தமிழகத்தைச் சேர்ந்த ரவிக்கு பாராட்டு தெரிவித்து கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் இரவு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியினை யுஏஇ தமிழ்ச்சங்க நிர்வாகிகள் வஹிதா ஜெய்தி, சலீம் கான், கங்கா ரமேஷ் உள்ளிட்ட குழுவினர் தொகுத்து வழங்கினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யுஏஇ தமிழ்ச்சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் பிரசன்னா, மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. முஹம்மது சிராஜுத்தீன் மற்றும் மகளிர் அணியினர் செய்திருந்தனர்.
விழாவில் துபாய் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் ஜெகந்நாதன், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டவர்களுடன் யுஏஇ தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.