சென்னையில் மலர்க் கண்காட்சி தொடங்கியது
கோடையில் வெயிலின் கொடுமையில் தவித்து கொண்டிருக்கும் சென்னை மக்கள் அடுத்த 10 நாட்களுக்கு மலர்களின் அழகிய அணிவகுப்பை பார்த்து வெயிலின் உக்ரத்தை கொஞ்சம் மறக்கலாம்.
சென்னை மக்களுக்கு நேற்று முதல் வரும் 10ம் தேதி வரை சென்னையில் லைப்ஸ்டைல் அமைப்பு சென்னை மலர் கண்காட்சி என்ற பெயரில் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்தி வருகிறது.
இதற்காக பல நாடுகளில் இருந்தும் மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 50 வகை மலர்களும், வெளிநாடுகளில் உள்ள 150 வகை மலர்களும் இந்த கண்காட்சியை அலங்கரித்து வருகின்றன.
சீனா மற்றும் ஹாலந்து நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள டூலிப், நிஷாந்தாஸ், மெழுகு பூ போன்றவை அரிய பூக்களை அந்த நாடுகளுக்கு சென்று பார்க்கும் செலவு இல்லாமல் இங்கேயே இருந்து பார்க்கும் வாய்ப்பை சென்னை மக்களுக்கு இந்த கண்காட்சி வழங்கியுள்ளது.
டைனோசர், தாஜ் மஹால், இந்திய வரைபடம் போன்ற வடிவங்களில் மலர்கள் அடிக்கி வைக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் இருக்கிறது.
மலர் கண்காட்சி நடைபெறும் அரங்கு முழுமையும் குளு குளு வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மலர்கள் மட்டுமல்ல மலர் கண்காட்சியை பார்க்க வரும் மக்களும் வெயிலின் பிடியிலிருந்து தப்பலாம்.
மேலும் இந்த கண்காட்சியில் இருக்கும் நூற்றுக்கணக்கான கடைகளில் அலங்கார மலர்கள் பூத்து குலுங்குகின்றன. கண்காட்சி செல்பவர்கள் தங்களுக்கு பிடித்த மலர்களை தேர்வு செய்து தங்களது சொந்தமாக்கி கொள்ளலாம். இது தவிர கண்காட்சியில் ராட்சத காய்கறிகளும் இடம்பிடித்துள்ளனவாம். வாங்க ஒரு முறை போய் பார்க்கலாம்...