மகாத்மா காந்தியின் கொள்கைகளை மறந்து விட்டோம்-நரேஷ் குப்தா வருத்தம்
சென்னை: மகாத்மா காந்தியின் பாதையை நம்மில் பெரும்பாலானோர் மறந்து வருகிறோம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினார்.
சமுக சேவகியும், காந்தியவாதியுமான முன்னாள் ராஜ்ய சபை உறுப்பினர் நிர்மலா தேஷ்பாண்டேவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அடுத்து நேற்று சென்னையில் ஒருங்கிணைந்த காந்திய பேரவை சார்பில் யாத்திரை ஒன்று துவக்கப்பட்டது.
இந்த யாத்திரையில் கலந்து கொண்டவர்கள் வேன்கள் மூலம் மெரினா கடற்கரை, எலியட்ஸ் பீச், சைதாப்பேட்டை போன்ற இடங்களில் 'அமைதியான தேர்தல் மற்றும் உலக அமைதி' என்ற பெயரில் பிரசாரம் செய்யவிருக்கின்றனர்.
அவர்கள் வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும். கொள்கைகளை வைத்து தான் போட்டியிட வேண்டும் என வலியுறுத்த இருக்கிறார்கள்.
சேத்துப்பட்டு எஸ்.ஆர்.எஸ் சர்வோதயா மகளிர் விடுதியில் நடந்த யாத்திரையின் துவக்கவிழாவில் தமிழக தேர்தல் ஆணையாளர் நரேஷ் குப்தா கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அப்போது நரேஷ் குப்தா கூறுகையில்,
இந்தியாவில் தோன்றிய புத்த மதம், இங்கு மறைந்துவிட்டது. மாறாக, அண்டை நாடுகளில் நன்கு தழைத்துள்ளது. இதுபோல், காந்தியின் கொள்கைகளை நம்மில் பெரும்பாலானோர் மறந்து வருவது வருத்தம் அளிக்கிறது. ஆனால், மேற்கத்திய நாடுகளில் காந்தியின் பெருமையை உணர்ந்து அவரை போற்றி வருகிறார்கள்.
அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும் பொதுமக்கள் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள். ஆனால், இவர்களில் சிலர், காந்தியடிகள் போதித்த சத்தியத்தையும், உண்மையையும் மறந்துவருவது எங்களைப் போன்ற அரசு ஊழியர்களுக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. காந்தியின் போதனையை அவர்கள் மறந்துவிட்டது வேதனை தருவதாக உள்ளது.
மக்களுக்கு முன்னுதாரணமாக திகழந்து, அறிவுரை கூற வேண்டிய இவர்களே, உண்மையையும், சத்தியத்தையும் மறந்துவிடும் நிலையில் இருக்கின்றனர். இவர்களால் மக்களுக்கு எப்படி அறிவுரை வழங்க முடியும் என்றார் நரேஷ் குப்தா.
அதன் பின்னர் பேசிய ஒருங்கிணைந்த காந்திய அறக்கட்டளை பேரவையின் தலைவர் பி.மாருதி பேசுகையில், நரேஷ் குப்தா எளிமையானவர். நேர்மையானவர். எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் அமைதியாக இருப்பவர் என்றார்.