ஜெ.க்கு துணை நிற்போம்-பிரான்ஸ் தமிழ் சங்க கூட்டமைப்பு
பாரிஸ்: தனி ஈழம் அமைக்க உதவுவேன் என்ற அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் பேச்சுக்கு பிரான்ஸ் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. மேலும், இந்த முயற்சி நிறைவேற உலக தமிழர்கள் அவருக்கு துணை நிற்பார்கள் என கூறியுள்ளது.
இது குறித்து அந்த கூட்டமைப்பின் தலைவர், ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
மதிப்பிற்குரிய செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு!
புலம்பெயரந்து பிரான்ஸ் நாட்டில் வாழும் ஈழத் தமிழ் மக்களின் நலன் பேணும் 63 தமிழ் சங்கஙகளின் தலைமை செயலகமாக ஒருங்கிணைந்து தொண்டாற்றும் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
உலகின் மூத்த குடியும் மொழியுமான தமிழினம் தனக்கென ஒரு நாட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்று உயரிய நோக்கத்தை வெற்றி கொள்ள தமிழீழத்தில் ஒரு விடுதலை தியாகம் ஆரம்பிக்கப்பட்ட போது அதற்கு உறுதுணையாக இருந்தவர்களில், முக்கிய பங்காற்றியவர்களில் மறைந்தவரும்; தமிழ் மக்கள் மனதில் என்றும் மறையாதவருமான எங்கள் அண்ணும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஸ்தாபகரும் பொதுச் செயலாளருமான அமரர் எம்ஜி ராமச்சந்திரன் அவர்களும் ஆவர்.
தீர்க்கதரிசனமான எண்ணங்களுக்கு நன்றி...
இன்று இவரின் தீவிரமான கொள்கையும், விடுதலை வேட்கையும் தீர்க்கதரிசனமான எண்ணங்களையும் நிறைவேற்ற அரும்பாடுபட்டு செயற்பட்டு தொண்டாற்றி வரும் அன்புச் சகோதரி அவர்களே முதற்கண் தங்களுக்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் சார்பில் எமது நன்றியையும், பாராட்டுதள்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
அண்மையில் ஈழத்தமிழ் மக்களால் முன்னெடுத்து இது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழீழத்துக்கான ஆதரவுக்ருரல் கொடுத்ததையும், கொடுத்து கொண்டிருப்பதையும் இன்றைய நிலையில் தமிழ் மக்கள் பட்டுகொண்டிருக்கும் துன்ப துயரங்களுக்கு மத்தியில் ஒரு நம்பிக்கையையும், வலுவையும் தந்துள்ளது.
இந்த நம்பிக்கையும், வலுவும் தனியே ஈழத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல உலகம் முழுவதும் பரந்து வாழும் அனைத்து தமிழ் மக்கள் நெஞ்சங்களிலும் பெரும் ஆறுதலை தந்துள்ளது.
இந்த வகையில் தாங்கள் எடுத்துகொண்ட தீர்க்கமான தீர்மானத்தை நடைமுறைப்படுத்த புலத்தில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் மிகமிக உறுதுணையாக இருப்பார்கள் என்பதையும் அதற்காக என்றென்ரும் தங்களுக்கு துணை நிற்பார்கள் என்பதையும் உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
ஈழத் தமிழர்களின் இன்றைய சொல்லொணாத் துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஒற்றுமையின்மைக்கும் கடந்த காலங்களில் இருந்து வந்த தமிழ் தலைமைகளின் அடுக்கு மொழிகளும் வீராவேச பேச்சுகளுமே ஒரு சவாலாக இருந்துவந்துள்ளது.
ஆனாலும், ஈழத்தமிழ் மக்களின் போராட்ட வாழ்விலே 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களின் தற்கொலைகளும், நூறாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களின் உயிர்த் தியாகங்களும் சரியான தலைமையின் நெறிப்படுத்தலுமே இன்று உலகத்தில் தமிழனைத் தலை நிமிர வைத்துள்ளது என்பதற்கு இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை.
இந்நிலை தொடரவும் இதற்கு பலம் சேர்க்கும் வகையிலும் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமையவும் நாம் எல்லோரும் சேர்ந்து தீர்க்கமான முடிவினை காண்போம் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.