இன்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க எழுச்சி பேரணி
சென்னை: ஈழத்தில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருப்பதை ஐ.நா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தும் வகையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் எழுச்சிப் பேரணி நடத்தப்படுகிறது.
மாலை 4 மணிக்கு சென்னை மற்றும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்தப் பேரணி நடைபெறும் என அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த கூட்டத்தில்,
இலங்கையில் சிங்கள ராணுவத் தாக்குதல் காரணமாக 1 லட்சத்துக்கும் மேலான தமிழர்களும், போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உறுப்புகளை இழந்தும் படுகாயம் அடைந்தும் உயிருக்கு போராடி வருகிறார்கள்.
பாதுகாப்பு வளையத்தில் இருப்பவர்கள் உணவு, மருந்து குடிநீர் இல்லாமல் ராணுவத்தின் பிடியில் அவதிப்படுகிறார்கள்.
போர் முடிவுக்கு வந்து விட்டதாக கூறி உலக நாடுகளை ஒரு புறம் ஏமாற்றிக்கொண்டு, மறுபுறம் தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் கொலைவெறி தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈழத் தமிழர்களை பாதுகாக்க, ஐ.நா. சபை நேரடியாக தலையிட்டு பொறுப்பு ஏற்க வேண்டும்.
முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு சொந்த வீடுகளுக்கு திரும்ப வேண்டும்.
போரில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கும், உறுப்புகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
திட்டமிட்டு இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே, ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தப் பேரணியில் தமிழக வணிகர் சங்கங்களின் பேரவையும் பங்கேற்கிறது.












Click it and Unblock the Notifications